சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில்..சட்டென தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்.. போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நல்ல வேளையாக காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கிவிட்டதால் உயிர் தப்பினார். கார் தீப்பற்றி எரிவது தொடர்பான காட்சிகள் பார்ப்போரை அதிர வைத்துள்ளது.
ஓடும் கார்கள்தீப்பிடித்து எரியும் சம்பவங்களை அடிக்கடி நாம் கேள்வி பட்டிருப்போம். அப்படி கார்கள் ஏதாவது ஒரு தொழில் நுட்ப காரணமாகவோ அல்லது என்ஜின் அதிகப்படியாக சூடானதாலோ, கார்களின் என்ஜினில் முன்பக்கம் புகை வருகிறது. சட்டென மொத்த காரும் தீப்பிடித்து எரிந்து விடுகிறது. சில நொடிகளில் சுதாரித்து வெளியேறுபவர்கள் தப்பிக்கிறார்கள்.

சில நேரம் கார்களின் லாக் ஓபன் ஆகாமல் போகும் நிகழ்வுகள் உண்டு.. அப்படியான சமயங்களில் கார்களை விட்டு சில நிமிடங்களில் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து விடுகிறது. அப்படி சென்னையில் கூட சில சம்பவங்கள் நடந்திருக்கிறது.
சென்னையில் நேற்று இரவு பரபரப்பான பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை காஞ்சிபுரத்தை சேர்ந்த சாமு என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். திடீரென காரின் முன்பகுதியில் புகை வரவே, காரை நிறுத்தி உள்ளே இருந்தவர்கள் கீழே குதித்து தப்பினார்கள். காரை ஓட்டி வந்த சாமுவும் சமயோகிதமாக குதித்து தப்பினார். காரில் இருந்தவர்கள் இறங்கிய சில நொடிகளிலேயே கார் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
கார் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.இந்த கார் தீ விபத்து காரணமாக பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய உதவினர். இந்த சம்பவம் காரணமாக சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை போலவே கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓடும் காரில் தீப்பிடித்தது. திருவட்டார் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் பென்னி என்பவர் நேற்று முன்தினம் தனது சொகுசு காரில் நாகர்கோவில் சென்றுள்ளார்.
இரவு 9 மணி அளவில் இரணியல் வள்ளி ஆற்றின் கரை பகுதியில் வந்து போது காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. உனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக இறங்கினார்.. அதேநேரம கார் மளமளவென தீப்பற்றி எரிந்தது. உடனே பொதுமக்கள் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
அதுமட்டுமின்றி இதுகுறித்து திங்கள் நகர் தீயணைப்புநிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ஜான்வின்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications