ஜெயகுமாருக்கு டெபாசிட் கிடைக்காது.. அனல் பறக்க பேசிய ஸ்டாலின்.. மயங்கி விழுந்த தி.மு.க வேட்பாளர்!
சென்னை: அதிமுக, சிஏஏ வை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்து தற்போது பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளனர். அவர்களுக்கு பிரசாரம் செய்ய வக்கும் இல்லை, துப்பும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
அதிமுக ஊழல் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த உடன் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராயபுரம் வேட்பாளர் ஐட்ரீம் ஆர் மூர்த்தி திடீரென்று மயங்கி விழுந்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திமுக பொதுக்கூட்டம்
வடசென்னைக்குட்பட்ட திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சங்கர், ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் எபினேசர், துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் சேகர்பாபு, மாதவரம் பகுதியில் போட்டியிடும் சுதர்சனம், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.டி.சேகர், திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் தாயகம் கவி மற்றும் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் பரந்தாமன் ஆகியோரை ஆதரித்து ராயபுரம் மேற்கு மாதா கல்லறை சாலையில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஜெயக்குமார் படுதோல்வி
இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:- தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாம் அனைத்து நேரத்திலும் நான் உங்களை தேடி வந்துள்ளேன். அமைச்சர் ஜெயகுமாரை ஓட ஓட விரட்டவே இங்கு வந்துள்ளேன். அவரை சாதாரண தோல்வி அல்ல படுதோல்வி அடைய செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். 2011 ஆம் ஆண்டு ஜெயகுமாருக்கு சபாநாயகர் பதவியை ஜெயலலிதா வழங்கினார்.
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு
ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கியபோது ஜெயகுமார் வருங்கால முதல்வர் என போட்டு கொண்டு சபாநாயகர் பதவியை இழந்தார். இதேபோல் முந்திரி கொட்டையாக செயல்பட்ட அவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிஆர்ஓ வாக செயல்பட்டு வருகிறார். மைக்கை பார்த்தால் பேசும் ஜெயகுமார் மக்களை பார்த்தால் பேசமாட்டார். கொரோனா தொற்று ஆரம்ப காலத்தில் வண்ணாரப்பேட்டையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு சென்று நானே பொதுமக்களிடம் நோய் தாக்கம் குறித்து பேசினேன்.
பாஜகவை எதிர்க்க துப்பில்லை
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பிறகு சிஏஏ கொண்டுவரப்படாது. தற்போது ஜெயகுமார் பல இடங்களில் நடனமாடி நாடகம் நடத்தி வருகிறார். சிஏஏ வை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்து தற்போது பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளனர். அவர்களுக்கு பிரசாரம் செய்ய வக்கும் இல்லை, துப்பும் இல்லை. அதிமுக ஊழல் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த உடன் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்படும். ராயபுரத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனுக்கான எந்த திட்டத்தையும் ஜெயகுமார் செய்ததில்லை. ஸ்டாலினின் உழைப்பை பற்றி திமுக தொண்டர்களுக்கு தெரியும்.
வேட்பாளர் மயங்கி விழுந்தார்
ஓய்விற்கே ஓய்வு கொடுத்து உழைத்த கலைஞரின் மகன் நான். கலைஞரே ஸ்டாலினுக்கு கொடுத்த பதவி உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். எப்போதும் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக தான் இருக்கும். ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லனாக அதுவும் காமெடி வில்லனாக இருக்கும். கொரொனா தடுப்பூசியை அனைவரும் போட்டு கொள்ளுங்கள். சில நேரங்களில் லேசான காய்ச்சல் உடல் வலி வரும் அதை கண்டு பயப்பட வேண்டாம். முறையாக தடுப்பூசியை போட்டு கொள்ளுங்கள். முக்கியமாக வெளியில் செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்லுங்கள். இதனை உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்டு கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார். இதற்கிடையில் மேடையில் இருந்து வாக்கு சேகரிப்பில் இருந்த ராயபுரம் வேட்பாளர் ஐட்ரீம் ஆர் மூர்த்தி திடீரென்று மயங்கி விழுந்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.