இரு எம்.டெக் படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து- அண்ணா பல்கலை.க்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்
சென்னை: இரு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது நியாயமில்லை என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசிடம் ஆலோசித்து இரு எம்.டெக். படிப்பை தொடர உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் திடீரென அறிவித்தது. இது பெரும் சர்ச்சையானது.

இதை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், உயிரி தொழில்நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன் முதலில் 1986ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டது. தற்போது 45 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-2021-ஆம் ஆண்டில் இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது என தெரிவித்துள்ளனர்.
மேலும் எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக அரசின் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை திடீரென ரத்து செய்தது ஏன்? என எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 35 ஆண்டுகளாக நடத்தப்பட்ட நிலையில் தற்போது என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது நியாயமில்லை என கண்டனம் தெரிவித்தார்.
மேலும் இந்தப் பிரச்சனையில் தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி புகழேந்தி.












Click it and Unblock the Notifications