டீக்கடைக்கு போனோமா.. டீ, காபி குடித்தோமானு இல்லாமல்.. "என்ன செய்றாரு பாருங்க" நம்ம மா.சு!
சென்னை: தருமபுரியில் ஓட்டப்பயிற்சி முடித்துவிட்டு அதகப்பாடியில் ஒரு டீக்கடைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அங்கிருந்தோரிடம் தடுப்பூசியின் அவசியம் குறித்து விளக்கினார்.
சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள மா சுப்பிரமணியன் எங்கு சென்றாலும் அவரது ஓட்டப்பயிற்சியையும் உடற்பயிற்சியையும் விடமாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
33 கோரிக்கை மனுக்களுடன் டெல்லி சென்ற போதும் கடுங்குளிரில் நாடாளுமன்ற வளாகத்தில் ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டிருந்தார். அது போல் மலை பகுதிகளிலும் அவ்வப்போது இது போல் ஓட்டப்பயிற்சி மேற்கொள்கிறார்.

வருங்கால சந்ததி
இவர் மாரத்தான் போட்டிகளை நடத்தி அதில் கலந்து கொண்டு வருங்கால சந்ததியினருக்கு உடற்பயிற்சி, ஓட்டப் பயிற்சியின் அவசியத்தை விழிப்புணர்வாக செய்து வருகிறார். கடினமான யோகாக்களையும் அசால்ட்டாக அல்வா சாப்பிடுவது போல் செய்து முடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்.

முதல்வர் போல்
முதல்வரை போல் அவரது அமைச்சரவை சகாக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களுடன் அளவளாவி வருகிறார்கள். அந்த வகையில் தருமபுரியில் மருத்துவத் துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அதகப்பாடியில் ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு டீக்கடைக்கு வந்திருந்தார்.
|
டீக்கடையில் அளவளாவிய மா சு
அங்கு ஒரு பெஞ்சில் அமர்ந்த அவர் அங்குள்ள ஊர் பெரியவர்களிடம் அளவளாவினார். அவர் கூறுகையில் எனக்கும் 25 ஆண்டுகளாக சுகர் இருக்கிறது. சுகர் இருப்பவர்களும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும்தான் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி முகாம்
இவ்வாறு செலுத்திக் கொண்டால் பிபி, சுகர் இருப்பவர்கள் மூன்றாவது அலையிலிருந்து தப்பலாம். இந்த தடுப்பூசி ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா பரவாமல் 97 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது. தடுப்பூசி முகாமுக்கு செல்லும் போது அங்கு ஒவ்வொருவடைய ரத்த அழுத்தத்தையும் சோதனை செய்வார்கள்.

ஊசி போடுதல்
அப்போது அதிகமாக இருந்தால் மாத்திரை போட்டு கட்டுக்குள் வந்த பிறகுதான் ஊசி போட வேண்டும் என அறிவுறுத்துவார்கள் என அங்கிருந்த முதியவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை உணர்த்தியதோடு அவர்களுக்கு இருந்த அச்ச உணர்வையும் மா சுப்பிரமணியன் போக்கியுள்ளார் என்றே சொல்லலாம்.

இவர் அல்லவோ அமைச்சர்
இதுதான் அமைச்சருக்கே உண்டான பொறுப்பு. டீ குடிக்க சென்ற இடத்தில் கூட உலகையே அச்சுறுத்தும் கொரோனா குறித்தும் அதை தடுக்க தடுப்பூசி போடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். அதிலும் அந்த கடையில் கவனித்தீர்களேயானால், அங்கு எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இருந்தன. எனவே இது அதிமுக தொண்டருடைய கடையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு வேளை கட்சியை சாராமல் அந்த டீக்கடைக்காரர் ஜெயலலிதா, எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும் இருக்கலாம். கட்சி பாகுபாடின்றி தான் சென்ற வேலையை சிறப்பாக செய்து விட்டார் மா சுப்பிரமணியன்.












Click it and Unblock the Notifications