விடைபெற்றார் மதன் பாப்.. கதறி அழுத மனைவி.. பெசன்ட் நகர் மயானத்தில் கண்ணீர் மல்க உடல் தகனம்!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் (71), உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். இந்நிலையில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
மதன் பாப், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மதன் பாப், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். அவரது தனித்துவமான சிரிப்பு, உடல் மொழி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 1984ஆம் ஆண்டு பாலு மகேந்திராவின் 'நீங்கள் கேட்டவை' படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், இயக்குநர் கே. பாலச்சந்தரின் 'வானமே எல்லை' படத்தில் 'மதன் பாப்' என்ற பெயரைப் பெற்றார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து, தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களால் புகழ் பெற்றார். மதன் பாப், நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும் பன்முகத் திறமை கொண்டவர்.
'அசத்தப் போவது யாரு' உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பணியாற்றிய இவர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடனும் நெருக்கமாக பணியாற்றியவர். மதன் பாப்பின் மியூசிக் ட்ரூப் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றியுள்ளார்.
மதன் பாப்பின் மனைவி சுசிலா ஒரு பாடகி, மேலும் இவர்களுக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். நடிகர் மதன் பாப்பின் மறைவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை முதல், மதன் பாப் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல், அவரது உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications