ஏலத்திற்கு வந்தது மதுவந்தி வீடு.. பல கோடி கடன் பாக்கி.. ஆக்சன் எடுத்த தனியார் வங்கி.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மதுவந்திக்கு சொந்தமான வீடு, தனியார் வங்கி மூலம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. வீட்டு கடன் பாக்கியை கொடுக்கவில்லை என்று கூறி இவருக்கு எதிராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவரின் வீட்டிற்கு கடந்த 14ம் தேதி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வீட்டு கடன் விவகாரங்களில், கடன் வாங்கிய நபர் கடனை திருப்பி கொடுக்காத பட்சத்தில், இது தொடர்பாக போன் செய்து அதிகாரிகள் விளக்கம் கேட்பது வழக்கம். அதன்பின் நேரடியாக வீட்டிற்கு வந்தும் விளக்கம் கேட்பார்கள்.
இதன்பின்பும் கடன் வாங்கிய நபர் வீட்டு கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் கோர்ட் மூலமாக சம்மன் அனுப்பப்படும். சம்மனுக்கு பின்பும் கடன் திருப்பி கொடுக்கப்படாத பட்சத்தில் அந்த வீட்டிற்கு கோர்ட் அனுமதியோடு வங்கி அதிகாரிகள் சீல் வைப்பது வழக்கம்.
மோடியை தேசத்தை காக்க வந்த கடவுளாக மக்கள் போற்றுகின்றனர்- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
சீல்
இதே வழக்கத்தை பின்பற்றிதான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்திக்கு சொந்தமான வீட்டிற்கும் வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டில் தனது சொந்த வீட்டில் இவர் வசித்து வருகிறார். இந்த வீட்டை வாங்குவதற்குதான் மதுவந்தி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடன்
1 கோடி ரூபாய் கடன் வாங்கிய மதுவந்தி தொடக்கத்தில் சில தவணைகள் கட்டி இருக்கிறார். ஆனால் அதன்பின் பல்வேறு தவணைகளை இவர் சரியாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வட்டி தொகையும் ஏறிக்கொண்டே சென்றுள்ளது. 2016ல் இந்துஜா லேலண்ட் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் இவர் இந்த கடனை வாங்கியதாக கூறப்படுகிறது.
சம்மன்
இந்த கடன் தொடர்பாக கோர்ட் மூலம் இந்துஜா லேலண்ட் நிறுவனம் சம்மன் அனுப்பியும் மதுவந்தி கடன் தொகையை கொடுக்கவில்லை. வேறு வங்கியில் பர்சனல் லோன் எடுத்து பணத்தை தருகிறேன் என்று சில மாதங்களாக தொடர்ந்து மதுவந்தி பதில் அளித்து வந்துள்ளார். ஆனால் கடனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. 2016ம் ஆண்டு சென்னையில் வாங்கிய இந்த கடனுக்கு மதுவந்தி வட்டியும் கொடுக்கவில்லை, முதலும் கொடுக்கவில்லை.
சீல்
வட்டி எல்லாம் சேர்த்து கடந்த தொகை அசலை விட அதிகரித்த நிலையில், 1.25 கோடியை உடனே செலுத்தும்படி மதுவந்திக்கு கோர்ட் மூலம் உத்தரவிடப்பட்டது. ஆனால் அதை மதுவந்தி கொடுக்கவில்லை. இதையடுத்து இந்துஜா லேலண்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன் மதுவந்தி மீது வழக்கு தொடுத்தது. அதை தொடர்ந்து கோர்ட் மூலம் அவரின் வீட்டை சீல் வைத்தனர். சம்மனுக்கு பதில் இல்லை, கடனை கட்டவில்லை, அலுவலகம் வரவில்லை என்ற காரணங்களால் இவரின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
ஏலம்
சீல் வைக்கப்பட்ட பின்பும் மதுவந்தி கடன் தொகையை திருப்பி தர முயலவில்லை. இந்த நிலையில், மதுவந்திக்கு சொந்தமான வீடு தனியார் வங்கி மூலம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்த வீடு அடுத்த மாதம் 29ம் தேதி ஏலம் விடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடு ஏலத்திற்கான ரிசர்வ் தொகை ரூ. 1.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.