கலாச்சார பழமை மட்டுமில்லை.. தொழில் வளர்ச்சியில் எப்பவும் டாப் சென்னைதான்!
சென்னை : சென்னை தினக் கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, தொழில் வளர்ச்சியில் சென்னை உச்சம் பெற்றே இருந்து வந்துள்ளது. நாட்டிலேயே தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்து வரும் சென்னை, மற்ற மாநிலங்களை வியக்கும் வகையில் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கி வருகிறது.
Recommended Video
தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகர தினம், கடந்த 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 22ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1639-ம் ஆண்டு மெட்ராசாக உருவான சென்னை, சிங்காரச் சென்னையாக பிரமாண்டமாக வளர்ந்து, அனைவரது மனதிலும் உணர்வுப் பூர்வமான இடத்தை பிடித்துள்ளது.

பெசன்ட் நகர், எலியட்ஸ் சாலையில் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளது. உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்ற மாவட்டங்களை காட்டிலும் அளவில் சிறியதாக தோன்றினாலும், அதன் வீரியம் மிக பெரியது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, சென்னை தொழிலில் கொடிகட்டி பறந்துள்ளது. 1836 செப்டம்பர் 29 அன்று, சென்னை தொழில் வர்த்தக சபையை, எட்டு தொழிலதிபர்கள் இணைந்து நிறுவினர்.
இதன் முதல் தலைவராக இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஜே. ஏ. அர்புத்னாட் இருந்தார். இதன் அலுவலம் தொடக்கத்தில் பின்னி அண்ட் கோவிலில் தற்காலிகமாக இயங்கி வந்தது. பின்னர் 1869 ஆம் ஆண்டில் தி மெட்ராஸ் மெயில் அலுவலகத்தின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்து நிரந்தர இடத்தில் அலுவலகம் செயல்படத் துவங்கியது. 1924 ஆம் ஆண்டு, மெர்கண்டைல் வங்கி அலுவலகங்களுக்கு வர்த்தக சபையின் அலுவலகம் இடமாறியது.
இந்தியாவின் முதல் தொழிற்பேட்டை 1958-ம் ஆண்டு கிண்டியில் உருவாக்கப்பட்டது. கடந்த 1965ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) உருவாக்கப்பட்டது. இது, தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அச்சாரமாக அமைந்தது..
1971 ஆம் ஆண்டில், முதலீட்டாளர்களுக்கு விரிவான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) அமைக்கப்பட்டது.
சென்னையில், முருகப்பா குழுமம் மூலம் தான் இந்தியாவின் முதல் சைக்கிள் தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு, ராயல் என்பீல்டு, அசோக் லைலேண்ட், டிவிஎஸ் என அடுக்கடுக்காக தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு படையெடுத்து வந்தன.
அதே போல, பல்வேறு ஐடி நிறுவனங்களும், சென்னையைதான் குறிவைத்தன. சென்னைக்கு 1980-ல் ஐடி நிறுவனங்கள் வரத்தொடங்கின. தற்போது 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல ஆயிரம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். ஐடி கம்பெனிகளில் தாயகமாக சென்னை மாறி, பல்வேறு மாநிலங்களையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது என்றால் அது மிகையல்ல.












Click it and Unblock the Notifications