1 ஆண்டு சிறை தண்டனை..? வைகோ மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணைக்கு தேதி குறித்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 15 aaம் தேதி, 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக, தேசதுரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வைகோவுக்கு எதிராக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட வைகோ பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2019 ஆம் ஆண்டு வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications