"சுந்தர் சி வேட்புமனுவை தள்ளுபடி செய்யுங்கள்.." திடீரென வந்த வழக்கு.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் களம் காணும் சினிமா இயக்குநர் சுந்தர் சி-க்கு எதிராக இப்போது புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் தனது சொத்துகளை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதனால் பிரச்சாரம் அனல் பறக்கிறது. மதுரை மத்தி தொகுதியைப் பொறுத்தவரை அதில் திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் களமிறங்குகிறார். மறுபுறம் அதிமுக சார்பில் அத்தொகுதி கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுந்தர் சி-க்கு எதிராக வழக்கு
தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் சூழலில், மதுரை மத்திய தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஷகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி, தனது வேட்புமனுவில் உண்மைகளை மறைத்துள்ளார். அவர் பங்குதாரராக இருக்கும் 'அவ்னி டெலி மீடியா', 'அவ்னி மூவீஸ்' மற்றும் 'அவ்னி சினிமாக்ஸ்' ஆகிய நிறுவனங்கள் மூலம் ஈட்டிய பல கோடி ரூபாய் வருமானம் குறித்த விவரங்களைத் தனது பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிடவில்லை. எனவே, இது குறித்து வருமான வரித்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனுவில் தகவல் மறைப்பு தொடர்பான புகார்களுக்கு நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் நேரடியாக வருமான வரித்துறையை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், சுந்தர் சி-க்கு எதிரான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தொடர்பான புகார்கள் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் சுந்தர் சி சினிமா பிரபலம் என்பதால் இந்த வழக்கு கவனிக்க வைக்கும் வழக்காக மாறியுள்ளது. வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் களத்திலும் இது எதிரொலிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு தேர்தல் களம்
தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளுமே வலிமையான ஒரு கூட்டணியுடன் களமிறங்குகிறது. மறுபுறம் நாதக வழக்கம் போல தனித்துப் போட்டியிடுகிறது. விஜய்யின் தவெக முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறது. தவெகவால் கூட்டணியை உருவாக்க முடியாத நிலையில், அவர்களும் தனித்துப் போட்டியிடுகிறார்கள்.
மதுரை மத்தி தொகுதியைப் பொறுத்த வரை திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் போட்டியிடுகிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில் சுந்தர் சி போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் கே. அப்துல் ஹக்கீம், தவெக சார்பில் முஸ்தபா ஆகியோரும் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications