முதல்வரின் தனி செயலர் உமாநாத் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை! தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்
சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக முதல்வரின் தனி செயலர் உமாநாத் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஐ இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மோகன்தாஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் முதல்வரின் தனிச் செயலராக பதவி வகி்த்து வரும் ஐஏஎஸ் அதிகாரியான உமாநாத், தன்னிச்சையாக தனக்கு கீழ் பணிபுரியும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
மேலும், "தேர்தலுக்காக பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் தனிச் செயலராக உள்ள உமாநாத் ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது. அனைத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பணியில் இருக்கும்போது முதலமைச்சரின் தனிச் செயலாளர் எந்த அடிப்படையில் செயல்படுகிறார் என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்." என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தேர்தல் ஆணையம் தனது கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை' என வாதிட்டார்.
அப்போது மனுதாரர் குற்றம்சாட்டும் முதல்வரின் தனிச் செயலரான ஐஏஎஸ் அதிகாரிக்கும், தேர்தல் பணிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக வரும் ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், 'ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான தனது புகாரை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான விவகாரங்களில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது' என்று கூறி எழுத்துப்பூர்வமான பதிலை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என்று வாதங்களை முன்வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கூடுதல் கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.













Click it and Unblock the Notifications