தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக் கோள் படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: ஹைகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைகோள் படங்களை இணையத்தில் பதிவேற்ற அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் செயற்கைகோள் படங்களை மார்ச் 17ஆம் தேதிக்கும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ளம் ஓடையின் இருபுறமும் ரூ.112 கோடி செலவில் சுவர் எழுப்ப தடை விதிக்கக் கோரி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ளம் ஓடை பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருபுறமும் சுவர் எழுப்புவதால் ஓடையின் அகலம் சுருங்கி தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுச்சுவர் கட்டுமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், அனைத்து தாலுகாக்களிலும் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக் கோள் புகைப்படங்களை எடுத்து, மார்ச் 17ஆம் தேதிக்குள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களின் தொகுப்பை தலைமைச் செயலர், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அனுப்பவும் உத்தரவிட்டனர்.
பெரும்பள்ளம் ஓடையில் சுவர்கட்டுவதை பொருத்தவரை, நீர்வழிப் பாதையில் குறுக்கீடு ஏற்படும் வகையில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது. நீரோட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications