உடுமலை சங்கர் கொலை வழக்கு: கெளசல்யா தந்தை விடுதலை- 5 பேரின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு
சென்னை: ஜாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் கொலை வழக்கில் முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Recommended Video
உடுமலை சங்கர், கெளசல்யா இருவரும் வெவ்வேறு ஜாதியினராக இருந்த போதும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கெளசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் உடுமலை சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் படுகாயங்களுடன் கெளசல்யா உயிர் தப்பினார். இந்த ஜாதி ஆணவக் கொலை தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது. அண்மையில் வெளியான நாடோடிகள் 2 திரைப்படத்திலும் இந்த படுகொலை காட்சி இடம்பெற்றிருந்தது.
உடுமலை ஆணவக்கொலை அப்பீல் வழக்கு தீர்ப்பு டைம் லைன்: 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
6 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த ஆணவப்படுகொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பழனி மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் மற்றும் பட்டிவீரன்பட்டி மணிகண்டன் என 11 பேர் மீது உடுமலை காவல்துறை கூலிப்படை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு அளித்தார். அதில் முதல் குற்றவாளியான கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, குற்றவாளிகள் ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன் , பி.செல்வக்குமார் , தமிழ் (எ) கலைதமிழ்வாணன் , மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார். கூட்டு சதி, வன்கொடுமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் 6 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
தாயார் உட்பட 3 பேர் விடுதலை
தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜூக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்தும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இதில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி , தாய்மாமன் பாண்டித்துரை , கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்து திருப்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல்
இந்த தூக்கு தண்டனையை தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய பெஞ்ச் பிப்ரவரி மாதம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
கெளசல்யா தந்தை விடுதலை
இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் இவ்வழக்கின் முதல் குற்றவாளியான கெளசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். எஞ்சிய ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன் , பி.செல்வக்குமார், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் இலியாஸ் தெரிவித்துள்ளார். இது போன்ற கருணை கொலைகளைத் தடுக்க தற்போது இருக்கும் சட்டங்களே போதுமானது; குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் மேல்முறையீடு செய்யும் என்றார்.