"அந்த" மாதிரி படங்கள்.. இளைஞர்களிடம் அதிகரிக்கும் "மோகம்".. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: செல்போன்களில் ஆபாசப் படங்களை பார்த்து பாலியல் குற்றவாளியாக மாறும் இளைஞர்களை சீர்திருத்த கவுன்சிலிங் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
தவறான பாதையில் சென்ற இளைஞர்களை திருத்தினால்தான் அவர்கள் அந்த மனநிலையில் இருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
”பச்சோந்தியை விட அதிக கலர் மாறுவார் ஓபிஎஸ்” அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிரடி காட்டும் இபிஎஸ்!
பாலியல் குற்றவாளியான 18 வயது இளைஞர்
தமிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றில் 6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை வீடியோ எடுத்த அவரது நண்பரும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பபட்டு இருக்கிறார். இதனிடையே, அந்த 18 வயது இளைஞர் எங்கு இருக்கிறார் எனக் கேட்டு அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சில கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
கல்லூரிக்கு செல்லும் வயதில்...
இந்த வழக்கில் 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரது நண்பர் மைனர் என்பதால் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பட்டு இருக்கிறார். இவர்கள் இப்போது "பாலியல் குற்றவாளிகள்" என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர். 18 வயதான இளைஞர், நியாயப்படி கல்லூரியில் படித்திருக்க வேண்டும். ஆனால் அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இளைஞர்களை சீரழிக்கும் ஆபாசப் படங்கள்
இணையதளம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு இளம் தலைமுறையினர் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் மூலம் இளைஞர்களுக்கு ஆபாசம் எளிதில் சென்றடைகிறது. இதனால் இளைஞர்கள் ஹார்மோன் மாற்றங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் சூழல் உருவாகிறது. மேலும், ஆபாசப் படங்களால் அவர்கள் தவறாகவும் வழி நடத்தப்படுகிறார்கள். இதன் பின்விளைவுகளை புரிந்து கொள்ளாமல் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
சீர்திருத்த நடவடிக்கை அவசியம்
ஒரு இளைஞரை சிறையில் அடைப்பது என்பது அவரை சமூகத்தில் இருந்து தூக்கி எறிவது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்து பாலியல் குற்றவாளிகளாக மாறும் இளைஞர்களை சீர்திருத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும்.
அப்படி செய்தால்தான், இந்த வகையான பாலியல் குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளியே வரும்போது திருந்திய நிலையில் அவர்கள் வாழ்க்கையை நடத்த முடியும். இந்த சீர்திருத்த முயற்சி எடுக்கப்படாவிட்டால், பதின் பருவத்தைச் சேர்ந்த ஒருவர் தனது முழு வாழ்க்கையையும் இழக்க நேரிடும். மேலும் அவர் ஒரு மோசமான குற்றவாளியாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை சிறையில் இருந்து விடுவித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.