சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு.. கிடுக்கிப்பிடி உத்தரவு போட்ட சென்னை ஐகோர்ட்
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தற்போதைய நிலையில் ஜாமீனை ரத்து செய்ய முடியாது எனக்கூறியதோடு, சவுக்கு சங்கருக்கு கூடுதல் நிபந்தனைகளை விதித்தனர். நிபந்தனைகளை மீறினால் ஜாமீன் ரத்தாகும் என்றும் எச்சரித்துள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி மோசடி வழக்குகளில் போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளில் சவுக்கு சங்கர் கைதானார். வீட்டின் பூட்டை உடைத்து சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு வரும் மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஜாமினில் வெளிவந்த சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் வழக்கம் போல பேசி வந்தார். இதையடுத்து மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், சாட்சிகளை மிரட்டுவதாகவும் கூறிய போலீசார் அவரது இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதில், சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அவருக்கு கூடுதல் நிபந்தனைகளை விதித்தனர். அதாவது, தனக்கு எதிராக உள்ள வழக்குகள் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சமூக ஊடகங்களில் எந்த வித கருத்தையும் தெரிவிக்க கூடாது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகளை தொடர்பு கொள்ளக் கூடாது. நிபந்தனை மீறினால் ஜாமீன் ரத்து ஆகும்" என்று உத்தரவிட்டனர். மேலும் சவுக்கு சங்கரின் உடல் நிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications