அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டினால்.. 10 மடங்கு மின் கட்டணம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி
அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் புதிய யோசனை கொடுத்துள்ளது.
சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பலரும் வீடு கட்டியுள்ளதாகப் புகார்கள் உள்ளன. பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை காலி செய்ய வைப்பது எளிதான காரியம் இல்லை.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் போதிலும், அரசின் இடங்களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டுவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

வழக்கு
இதனிடையே ஆக்கிரமித்துக் கட்டப்படும் வீடுகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள வீட்டை காலி செய்யும்படி, ஆவடி தாசில்தாரர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

10 மடங்கு கட்டணம்
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இது சம்பந்தமாகச் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நீதிபதி அதிருப்தி
பின்னர், 10 மடங்கு மின் கட்டணம் செலுத்தத் தயாராக இருந்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அதுகுறித்து மனுத்தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டனர். அதன்படி, 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனத் தெரிவிக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட்
இதையடுத்து, குறிப்பிட்ட அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகள் உள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய ஆவடி தாசில்தாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர். அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது அதிகரித்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில், நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் சொல்லியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications