டிஐஜி வருண்குமார் வழக்கில் சீமானுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் அவதூறு கருத்து தெரிவிக்க இடைக்கால தடையை அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருண்குமார் - சீமான் இடையே நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டிஐஜி வருண்குமார் இடையே அண்மையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இரு தரப்பும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்தனர். அதிலும் நாம் தமிழர் கட்சியினர், வருண்குமார் ஐபிஎஸ் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியிருந்தனர்.

இது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக பொதுவெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் இரண்டு கோடியே பத்து லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் சீமான் தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் வழக்கை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி தண்டபாணி, அதுவரை வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச தடையையும் நீட்டித்து உத்தரவிட்டிருந்தார்.
கடந்த மே மாதம் இந்த வழக்கு விசாரணையின் போது டிஐஜி வருண்குமார் விசாரணைக்கு ஆஜரான நிலையில் சீமான் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். கடந்த முறை இனி ஆஜராவேன் என சொல்லித் தானே சென்றீர்கள். இதுதான் கடைசி வாய்ப்பு என சீமான் தரப்புக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications