"சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த அனுமதி, ஆனா.." முக்கிய கட்டுப்பாடுகளை விதித்த சென்னை ஐகோர்ட்
சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றி, பார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சில கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பார்முலா 4 கார் ரேஸ் நடக்க இருந்தது. மேலும், இந்தியன் ரேசிங் லீக் போட்டி கார் பந்தயமும் நடக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான டிக்கெட் விற்பனையும் கடந்தாண்டு டிச. தொடங்கப்பட்டது.

சென்னை தீவுத் திடல் மைதானத்தைச் சுற்றி 3.5 கி.மீ ரூட்டில் இந்த கார் பந்தயம் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. தீவுத் திடலில் தொடங்கும் இந்த பந்தயம், ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலில் முடிவடையும் வகையில் இந்த ரேஸ் சர்க்யூட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார் ரேஸ்: இந்தியாவில் முதல்முறையாக இரவு நேரத்தில் நடக்கும் முதல் கார் ரேஸ் இதுவாக இருக்கும் என சொல்லப்பட்டது. இந்த கார் ரேஸை நடத்தத் தமிழக அரசு ரூ.40 கோடியை ஒதுக்கியது. இருப்பினும், டிச. தொடக்கத்தில் கொட்டிய கனமழையால் கார் ரேஸ் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு காலவரையற்ற போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கார் ரேஸ் மீண்டும் நடக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.. இதற்கிடையே சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதன் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் நடைபெற்றன.
வழக்கு: அப்போது மனுதாரர்கள் சார்பில், கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு என்றும் சட்ட அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை, ராணுவ தளம் அருகிலேயே இருக்கும் நிலையில், அதற்கான அனுமதியும் பெறவில்லை என்று கூறப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், கார் பந்தயம் நடத்துவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால் இதை நீதிமன்றம் ஆராய முடியாது எனவும் இந்த பந்தயத்திற்காக அரசு குறைவாகவே செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் , பார்முலா 4 கார் ரேஸ் நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டுள்ளனர்.
கட்டுப்பாடுகள்: அதே நேரத்தில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பந்தயத்துக்காக அரசு அளித்த 42 கோடி ரூபாயை அரசுக்குத் திரும்பி அளிக்க வேண்டுமெனப் பந்தயம் நடத்தும் தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.















Click it and Unblock the Notifications