அரக்கோணம் பாலியல் புகார்: திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலுக்கு முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட் ஆணை!
சென்னை: திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக கூறி இளம் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட அரக்கோணம் முன்னாள் திமுக நிர்வாகி தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் தெய்வச்செயல் தம்மை திருமணம் செய்துகொண்டு வன்கொடுமை செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் குற்றம்சாட்டினார். மேலும் 20 இளம்பெண்கள் வரை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் பேட்டி அளித்திருந்தார்.

இளம் பெண்ணின் புகாரின் பேரில் தெய்வச்செயல் மீது நான்கு பிரிவுகளின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனவே எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் தெய்வச்செயலின் மனைவி கனிமொழியும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
தெய்வச்செயல் தாக்கல் செய்திருந்த மனுவில், "எனக்கு எதிராகப் புகார் அளித்த இளம்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்து கோரி அவரது கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறார். இன்னும் அவர்கள் இருவருக்கும் இடையே விவகாரத்து கிடைக்கவில்லை. எனக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் கரைக்காலில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி திருமணம் நடைபெற்றது உண்மைதான்.
இப்போது அந்த இளம்பெண் திடீரென அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் எனக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் எனக்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு செய்கிறார். எனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் எனக்கு எதிரான குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும். என்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்ல என்பதால் எனக்கும், என் மனைவிக்கும் முன் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் அளித்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தெய்வச்செயலுக்கும், அவரது மனைவிக்கும் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். எனினும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, தெய்வச்செயல், அவரது மனைவி இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications