குடிகாரர்களுக்கு ஷாக் செய்தி..டாஸ்மாக் நேரம் குறைப்பு? அரசுக்கு முக்கிய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!
சென்னை : பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

மது விற்பனை
குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். கொரோனா காலத்தில் கடைகள் மூடப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக கடந்த ஆண்டு சாதாரண நாட்களில் கூட அதிக அளவு மது விற்பனை இருந்தது. இந்நிலையில் மது போதையில் குற்ற செயல்கள் அதிகமாகி வரும் நிலையில், மதுக்கடைகளை மூட வேண்டுமெனவும், நேரத்தை குறைக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

டாஸ்மாக் கடை
இந்நிலையில் பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

பொதுநல வழக்கு
திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்பதால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியுள்ளனர்.

பதில் மனு
இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த பதில்மனுவில், டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரம் குறைப்பு
மேலும், பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது. தமிழக அரசு பதிலளித்த பின்னர் டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவினை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications