'அரசியல் அதிகாரம் பறிப்பு..' மக்கள்தொகை அடிப்படையில் எப்படி எம்பிக்களை குறைக்கலாம்? ஐகோர்ட் கேள்வி
'அரசியல் அதிகாரம் பறிப்பு..' மக்கள்தொகை அடிப்படையில் எப்படி எம்பிக்களை குறைக்கலாம்? ஐகோர்ட் கேள்வி
சென்னை: மக்கள் தொகையைக் காரணமாகக் கூறி தொகுதி மறுவரையறையின் போது மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதன் மூலம் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் எம்பிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தவறிய மாநிலங்களின் எம்பிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம், அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

39ஆகக் குறைப்பு
இந்த வழக்கு விசாரணையின் சமயத்தில் நீதிபதிகள், "மத்திய அரசின் கொள்கை முடிவைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தியது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் 1962ஆம் ஆண்டு 41ஆக இருந்த தமிழக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்னர் 39ஆகக் குறைக்கப்பட்டது. அதேநேரம் மத்திய அரசின் கொள்கையை அமல்படுத்தத் தவறி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாமல் விட்ட உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அதிகாரம் பறிப்பு
1967ஆம் ஆண்டு முதல் 14 மக்களவை தேர்தல்களில் மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதால் தலா 2 எம்பிக்கள் வீதம் மொத்தம் 28 எம்பிக்களை தமிழ்நாடு இழந்துள்ளது. எம்பிக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் மூலம் அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை காரணமாக மாநில உரிமைகளும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய வளர்ச்சிக்கான திட்டங்களையும் தமிழ்நாடு இழந்துள்ளது.

ஏன் தடை விதிக்கக் கூடாது
மொழி வாரி மாநிலங்களைக் கொண்டுள்ள இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் அதிகாரமும் உரிமைகளும் சமமாக இருக்க வேண்டும். இதனால் தொகுதி மறுவரையறையை ஒரு காரணமாகக் கூறி ஒரு மாநிலத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. இந்த நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது" என்ற முக்கிய கருத்துகளை முன் வைத்தனர்.

5,600 கோடி இழப்பீடு
மேலும் மத்திய அரசிடம் சில கேள்விகளையும் எழுப்பினர். அதாவது, "ஒவ்வொரு எம்பி- க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் நலத்திட்டப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த 14 மக்களவை தேர்தல்களில் ஒவ்வொரு தேர்தலிலும் தலா 2 மக்களவை இடங்கள் என மொத்தம் 28 எம்பிகளை இழந்துள்ள தமிழ்நாட்டிற்கு இழப்பீடாக ரூபாய் 5,600 கோடியை மத்திய அரசு ஏன் வழங்கக்கூடாது?

4 வாரங்களில் பதில்
தொகுதி வரையைக் காரணமாக மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால், அதற்குப் பதில் மாநிலங்களவை எம்பிக்கள் எண்ணிக்கையை ஏன் அதிகரிக்கக்கூடாது" என்று முக்கிய கேள்விகளை எழுப்பினர். இது தவிர, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக நீதிமன்றமே தானாக முன்வந்து சேர்த்துள்ளது. மேலும், இந்த வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளும் நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications