'கோயில் யானைகள் உடல்நலன் பற்றிய அறிக்கையை உடனடியாக சமர்ப்பியுங்கள்..' சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வளர்ப்பு யானைகள் மற்றும் கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும், கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வளர்ப்பு யானைகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்த எல்சா அறக்கட்டளை சார்பில் யானைகள் பிடிக்கப்படும் போது, விதி மீறல்கள் நடைபெறுவது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் வரவேற்பு
ஸ்ரீரங்கம் கோயில் யானைகளைப் பராமரிப்பது தொடர்பாகக் காவிரி நதி அருகே கோயிலுக்குச் சொந்தமான வனம் போன்ற சூழ்நிலை கொண்ட நிலத்தில் பராமரிக்கப்படும் என்றும், விழாக் காலங்களில் மட்டும் அவற்றைக் கோயிலுக்கு அழைத்து வரலாம் என்றும் யோசனை கொடுக்கப்பட்டது. இந்த யோசனைக்கு நீதிபதிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

நீதிபதிகள் உத்தரவு
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் வீடியோ பதிவைத் தயாரித்தும், அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையும், அவை எப்படி பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றப்பட்டன? என்பது குறித்தும், கால்நடை மருத்துவரை நேரில் அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள யானைகளின் உடல் நலன் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் வனத்துறை முதன்மை பாதுகாவலருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 24ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

யானைகள் முகாம்
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை சார்பில், ஆண்டுதோறும் யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்படுகிறது. முதலில் கடந்த 2003ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தெப்பக்காட்டில் யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டது. கடந்த 2012 முதல் யானைகள் நல வாழ்வு முகாம் கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள, தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications