வருமான வரி நோட்டீஸுக்கு எதிரான வழக்கு.. அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தடை- சென்னை ஐகோர்ட்
அமைச்சர் பொன்முடி மீதான வருமான வரித் துறை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னை: வருமான வரித் துறை தொடர்பான வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.
அந்த ஆவணங்களில் அமைச்சர் பொன்முடிக்கு 60 லட்சம் ரூபாய் வழங்கியதாகக் குறிப்புகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அமைச்சர் பொன்முடிக்கு வருமான வரித் துறை நோட்டீஸும் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "அமைச்சர் பொன்முடி எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை" என்று குறிப்பிட்டார்.
வாதங்களை முழுமையாகக் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். இதுவரை வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 27-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications