நில அபகரிப்புக்கு உடந்தை.. ரூ.20 லட்சத்தை அபேஸ் செய்த தாசில்தார்? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: நில அபகரிப்பாளர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அளித்த புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டல் விடுப்பதாக திருப்பத்தூர் முன்னாள் தாசில்தாரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் மீது விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி அருகே உள்ள ஆதனவூர் கிராமத்தில் குமரேசன். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் பட்டா நிலத்தில் பயிர் விளைவித்து வருகிறார். சிலர் இந்த சொத்தில் அத்துமீறி நுழைந்து பயிருக்கு சேதம் ஏற்படுத்தி உள்ளனர். மேலும் நிலத்தை சுற்றி போடப்பட்டு இருந்த பாதுகாப்பு வேலியை சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து குமரேசன் காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பிரச்சனைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே தான் மூன்றாவது நபரான கோவிந்தராஜ் திருப்பத்தூர் தாசில்தாரை அணுகி, குமரேசனின் தனிப் பட்டாவில் தங்கள் பெயரை சேர்க்க வேண்டுமென விண்ணப்பம் அளித்து, பெருந்தொகையை லஞ்சமாக கொடுத்து, கூட்டு பட்டாவாக மாற்றியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குமேரசன் தரப்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தாசில்தார் விசாரணையின்போது, பட்டா பிரச்சினையை தீர்த்துவைப்பதாக கூறி, 20 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆகஸ்ட் மாதம் அளித்த புகார், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து இருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த பிரச்னை தொடர்பாக தாசில்தாரருக்கு எதிராக அளித்த புகாரை விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதற்குள் திருப்பத்தூர் தாசில்தாராக இருந்த சிவபிரகாசம், வாணியம்பாடிக்கு மாற்றலாகிவிட்டார். இவர் மீதான புகாரை விசாரிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், புகாரை திரும்பப் பெறும்படி கூலிப்படையினரை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும், இதுசம்பந்தமாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தும், தாசில்தாரர் அரசு ஊழியர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தனது புகாரை விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று குமரேசன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சவுந்தர், தாசில்தாரர் சிவபிரகாசத்துக்கு எதிரான புகார் மீது மூன்று வாரங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications