இந்து அறநிலைய துறைக்கு எதிராக 20 நாட்கள் போராட அனுமதி கேட்ட விவசாயிகள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: இந்து அறநிலைய துறையை கண்டித்து விவசாயிகள் 2 நாட்கள் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் சார்பில், தொடர்ந்து 20 நாட்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், இரண்டு நாட்கள் அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
விவசாயிகள் சார்பில், தொடர்ந்து 20 நாட்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், பல்வேறு காலகட்டத்தில் விவசாயிகளுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை கோவில்களுக்கு சொந்தமான நிலங்களாக கூறி அவற்றை அரசு வகை மாற்றம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்து அறநிலைய துறை, வக்ஃப் வாரியத்திடம் வகைமாற்றம் செய்து ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தானாக பெற்ற விவசாய நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க கோரியும், விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்களை மாற்றி கோவில், மற்றும் வக்ஃப் வாரியங்களுக்கான நிலம் என வகைமாற்றி விவசாயிகளிடம் வாடகை வசூலிக்கும் அறநிலையத்துறை, வக்ஃப் வாரியத்தை கண்டித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், 20 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என்றும் 2 நாட்கள் போராட்டத்திற்கு அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.
2 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாய சங்கம் காவல்துறைக்கு புதிதாக மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், அதை சென்னை காவல்துறை உரிய பரிசீலினைகளை செய்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications