"ஆதாரங்களை உடனடியாக சமர்ப்பியுங்கள்!" கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை வழக்கில் சென்னை சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாகப் புகார் கூறப்பட்டது.
இது குறித்துச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் திருமண மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை!
மயில் சிலை வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு வழக்கறிஞர்
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மயில் அலகில் மலர் தான் இருந்தது என்பது தெரியவந்ததாகவும், சிலை மாயமானதற்குக் காரணமான அதிகாரிகளை அடையாளம் காண உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு விசாரணையை முடிக்க ஆறு வாரக் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சிலையை கண்டறிய நடவடிக்கை
தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, மயில் சிலை மாயமானது குறித்துக் காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், தொல்லியல் துறையிடம் இருந்து, சிலையின் தொன்மை குறித்த சான்றிதழ் பெற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்துள்ளதாகவும், சிலையைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
விசாரணை விரைந்து முடியுங்கள்
இருப்பினும், மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், இந்த வழக்கில் தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாகக் குறை கூறினார். இதையடுத்து, உண்மை கண்டறியும் குழு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், காவல் துறை விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு
மயிலின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்குத் தள்ளி வைத்தனர். இடைப்பட்ட காலத்தில், அலகில் மலருடன் கூடிய மயில் சிலையைத் தயாரிக்கும் பணியைத் துவங்கும்படி, அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.