புதுவையில் இருந்து எவ்வளவு மது பாட்டில் எடுத்து வரலாம்? சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
சென்னை: புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் தமிழகத்தை விட சற்று குறைந்த விலையில் அங்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் புதுவை வழியாக செல்லும் மது பிரியர்கள் அங்கு மதுபானங்களை வாங்கிவிட்டு செல்வதை பார்க்க முடியும். இந்த நிலையில் புதுவையில் இருந்து எவ்வளவு மதுபானங்கள் வாங்கி வர முடியும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
தனிநபர் ஒருவர் 4½ லிட்டர் மது வைத்துக்கொள்ளலாம் என்று விதி இருக்கின்றது என்ற காரணத்தினால் புதுச்சேரியில் இருந்து 1680 மில்லி லிட்டர் மது பாட்டில்கள் கொண்டு வந்ததாக தொடரப்பட்ட வழக்கானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார்
தமிழகம் மற்றும் புதுவை எல்லையான, கடலூர் மாவட்டம் ஆல் பேட்டை சோதனைச் சாவடியில் தமிழக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காட்டுமயிலூரை சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவரது வாகனத்தில் மதுபாட்டில்கள் இருந்தன. 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட ஒரு மதுபாட்டிலும், 'ஓல்டு மங்க்' என அழைக்கப்படும் 180 மில்லி லிட்டர் அளவுகொண்ட இரண்டு மதுபாட்டிலும் அந்த வாகனத்தில் இருந்தது.
இதனை பறிமுதல் செய்த போலீசார், வாகன ஓட்டி வல்லரசு மீது தமிழ்நாடு மது தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணையானது கடலூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வல்லரசு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சொந்த பயன்பாட்டுக்காக ஒருவர் 4.5 லிட்டர் மது வைத்துக் கொள்ளலாம் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருக்கிறது. ஆனால், மனுதாரர் 1680 மில்லி லிட்டர் மதுபானம் மட்டுமே அவரது வாகனத்தில் வைத்து இருந்தார். எனவே, மனுதாரர் மீது எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது. அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
தொடர்ந்து தீர்ப்பு கூறிய நீதிபதி, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை 4.5 லிட்டர் வரை சொந்த பயன்பாட்டுக்காக வைத்துக்கொள்ள முடியும் என என்று விதி இருக்கிறது. மனுதாரரிடம் கைப்பற்றப்பட்ட மதுபானத்தின் அளவு 1 லிட்டர் 680 மில்லிலிட்டர்தான். எனவே, மனுதாரர் மீது வழக்கை தொடர முடியாது. அந்த வழக்கை ரத்து செய்கிறேன்" என்று உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications