அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது தவறு இல்லை: உயர் நீதிமன்றம்
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மரணத்துக்குப் பின், 2017-ல் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். அதோடு இவர் தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. ஆனால் அதற்குள் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது.
இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது. சசிகலா சிறைக்கு சென்ற பின் அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி அதிமுக பொதுக்கூட்டத்தில் பறிக்கப்பட்டது. தினகரனுக்கு அளிக்கப்பட்டு இருந்த துணை பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

பதவியை கலைத்தனர்
அதை தொடர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ் மோதல் என்று நீண்ட போராட்டத்திற்கு பின் 2017 செப்டம்பர் 12ல் நடத்திய பொதுக் குழு கூட்டத்தில்பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதியதாக இரு பதவிகள் அதிமுகவில் உருவாக்கப்பட்டது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

எதிர்ப்பு
இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த மனுவில், அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. பொதுச்செயலாளர்தான் இந்த பதவியை உருவாக்கி இருக்க வேண்டும்.

தவறு
அதனால் விதிமுறைப்படி இந்த நியமனம் தவறு. இதுசம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தக்களை ஏற்று தேர்தல் ஆணையம் ஏற்றது தவறு. தேர்தல் ஆணையம் 2018 மே 4ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.,ஜெயலலிதா மரணத்தின் போது அமலில் இருந்த விதிகளை பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறப்பட்டது.

மனு
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதில் எந்த சட்ட விரோதமும் இல்லை. இதில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டதா? இல்லையா என தேர்தல் ஆணையம் ஆராய முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

சிக்கல்
மேலும், தேர்தல் ஆணையம், உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் வழக்கு தான் தொடர முடியும் எனவும் குறிப்பிட்டனர். இதனால் அதிமுகவில் இப்போதைக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களில் எந்த சிக்கலும் கிடையாது. இரண்டு பேரின் பதவிக்கும் எந்த சிக்கலும் இல்லை. இது ஒரு வகையில் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி நீக்கத்திற்கு எதிரான வழக்கிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications