சித்திரை திருவிழா கலவரம்.. பாமகவிடம் 18 லட்சம் இழப்பீடு கேட்ட தமிழக அரசு.. ரத்து செய்த ஹைகோர்ட்
சென்னை: சித்திரை திருவிழா நிகழ்ச்சியின்போது பாலத்தை சேதப்படுத்தியதாக கூறி ரூபாய் 18 லட்சம் இழப்பீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து கடந்த 2013ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சித்திரை திருவிழாவை நடத்தியது. இதில் கலந்து கொள்ள வந்த பாமக-வினர் காவல்துறை அனுமதியை மீறி மரக்காணம் அருகேயுள்ள கட்டயம் தெரு என்ற பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் ஓடை பாலம் ஆகியவற்றை சேதப்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 500க்குமேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், புதுச்சேரி - மைலம் சாலையில் உள்ள கரசனூரில் உள்ள பாலம் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், ரூ18 லட்ச ரூபாய் இழப்பீடாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பாமக-வின் அப்போதைய தலைவர் ஜி.கே. மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கலவரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியதாக கூறி நோட்டீஸ் அனுப்பியது தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்த போது, பாமக இழப்பீடு செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்புவதற்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற இந்த மரக்காணம் வன்முறை சம்பவங்களில் பாமகவினர் 2 பேர் கொல்லப்பட்டனர். இதில் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த சம்பவங்களின் போது டாக்டர் ராமதாஸும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்ட போதும் மிகப் பெரும் வன்முறைகள் வட தமிழகம் முழுவதும் வெடித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications