"தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா?" கேள்வி எழுப்பிய நீதிபதி! துக்கம் தொண்டையை அடைக்க ராமதாஸ் பதில்
சென்னை: மாம்பழச் சின்னத்தை தனக்கு ஒதுக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், "தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா" என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் "பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

பாமகவின் தலைவராக ராமதாஸையும் அவர் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதுவரை தமிழகம், புதுவை மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் " என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அது போல் உள்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை பாமகவின் மாம்பழச் சின்னத்தை முடக்கி வைக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது கடந்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதியுடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து 2026 ஆம் ஆண்டு வரை பாமக தலைவர் பதவிக்காலம் இருப்பது போல் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
ராமதாஸை கட்சியின் தலைவராக அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், கட்சியை அன்புமணி அபகரித்துக் கொண்டார் என்றும், 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியவர் ராமதாஸ்தான் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில், இதே விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான பாமக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது.
மாம்பழச் சின்னம் முடக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என விளக்கமளித்தார்.
இந்த நிலையில் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா குறுக்கிட்டு, "தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா?" என கேள்வி எழுப்பினார். அதற்கு ராமதாஸ் தரப்பினர், "தந்தை சொல்வதை மகன் கேட்பது இல்லை" என பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து அன்புமணி தரப்பில் யாராவது ஆஜராகி இருக்கிறார்களா என நீதிபதி கேட்டதற்கு அவர் தரப்பில் ஒரு வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது அவர், ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் ராமதாஸ் போட்டுள்ள கையெழுத்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
உடனே ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் இதை மறுத்தார். ராமதாஸ் இன்று கூட நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அவர் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அன்புமணி தரப்பினர் பொய் கதைகளை சொல்லி வருகிறார்கள் என தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்ட நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா? நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என ராமதாஸுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் உள்கட்சி விவகாரம் தொடர்பான ஏற்கெனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கேயே நிவாரணம் தேடிக் கொள்ளுங்கள் என கூறி இரு வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications