தவெக தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை! கருணை காட்டுகிறீர்களா- நீதிபதி சரமாரி கேள்வி
சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான நிலையில் அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவிற்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிய மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்களே, ஏன் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. புகார் இல்லாவிட்டாலும் அவர் மீது வழக்கு செய்திருக்க வேண்டுமே என நீதிபதி செந்தில் குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வழக்கை சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தாக்கல் செய்துளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கரூரை போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் "ரோடு ஷோ" போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தவெக தலைவர் விஜய், குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் கரூர் பிரச்சாரத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த கரூர் கொடூரம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் இனி மேலும் நடக்காதபடி அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீஸார் தடுக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
கரூர் துயர சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி என். செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தவெக தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய என்ன தடை உள்ளது, புகார் இல்லாவிட்டாலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டுமே! காவல் துறை கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது.
வெறும் இருவரை மட்டுமே கைது செய்துள்ளீர்களே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏன் கருணை காட்டுகிறீர்கள். காவல் துறை அனைத்தும் நடைபெற அனுமதித்துள்ளது. கரூர் நெரிசல் விவகாரத்தில் சேதங்களை கணக்கிட்டீர்களா, ஏன் இவ்வளவு தாமதம் என அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார்.
நடந்தது என்ன
கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக பிரச்சார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசிய போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துவிட்டனர். விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினராம். அங்கு ஏற்கெனவே கூட்டம் இருந்த நிலையில் விஜய் வாகனத்துடன் நாமக்கல்லில் இருந்து பலர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இத்தனை நடந்தும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கரூர் சம்பவத்திற்கு 4 நாட்கள் கழித்து வெளியான வீடியோவில் கூட அவர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதோ வருத்தம் தெரிவித்ததோ கூட செய்யவில்லை. எனவே விஜய் தனது கட்சியினர் இருவரை கைது செய்ததும் அவர்களுக்காக வீடியோ போட்டாரே தவிர் அவர் கரூர் மக்களுக்காக அல்ல என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications