மேலதிகாரி சட்டையை பிடித்து, தொழிலாளி திட்டியதற்கெல்லாம் பணி நீக்கம் செய்ய முடியாது: சென்னை ஹைகோர்ட்
சென்னை: மேல் அதிகாரியுடன் சண்டை போடுவதோ அல்லது அவரை மோசமான வார்த்தைகளால் திட்டுவதால் மட்டுமே ஒருவரை பணிநீக்கம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்தின் தேயிலை தொழிலாளர் நலச் சங்கத்தின் செயலாளராக இருந்த எஸ் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவைத் தான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்திருந்தது.

நீதிபதி எஸ் வைத்தியநாதன் மற்றும் நீதிபதி ஆர் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
என்ன வழக்கு: கடந்த 2009ஆம் ஆண்டில், ராஜா தனது மேலதிகாரிகளைப் பார்த்து கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், மேலாளர்கள் ஒருவரின் சட்டை காலரைப் பிடித்தும் இழுத்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கையாக ராஜா பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் ராஜா தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம் அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. மேலும், அவர் வேலையின்றி இருந்த காலத்திற்கு 50 சதவீத ஊதியத்தை வழங்கவும் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அந்த நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தனி நீதிபதி: இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதி, தொழிலாளர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்தார். இதையடுத்து ராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதை நீதிபதி எஸ் வைத்தியநாதன் மற்றும் நீதிபதி ஆர் கலைமதி ஆகியோர் அமர்வு விசாரித்தது.
வழக்கு விசாரணையின் போது, ஊழியரை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யும் போது அவரது கடந்தகால நடத்தையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது. அதற்கும் நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
சென்னை ஐகோர்ட் பெஞ்ச்: அதில் "கடந்த 2001இல் சம்பந்தப்பட்ட ஊழியர் ஆவேசமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, இதை வைத்து அவர் அடிக்கடி இதுபோல நடந்து கொள்கிறார் எனக் கூற முடியாது. மேலும், தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதால் மட்டும் ஒருவர் மீது பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாது.
தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட அதிகாரம் உள்ளது.. மேலும், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உயர் அதிகாரி முதலில் அந்த ஊழியரின் சட்டையைப் பிடித்ததே திடீரென அவர் ஆத்திரமடையக் காரணமாக இருக்கிறது. ஊழியர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று இயேசுவைப் போல நடந்து கொள்வார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
அதேநேரம் நாங்கள் இப்படிச் சொல்வதால் அந்த ஊழியரின் செயலை நியாயப்படுத்துகிறோம் என்றோ அவரது தவறான நடத்தை சரி என்று சொல்கிறோம் என்றோ அர்த்தம் இல்லை" என்பதையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.
மேலும், தொழிலாளர் நீதிமன்றத்தின் உத்தரவில் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. அதாவது அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் அவர் பணியில் இல்லாத காலத்திற்கான ஊதியத்தை அவருக்கு வழங்கத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications