வெறும் கைகளில் குப்பைகளை பிரிக்கும் தூய்மை பணியாளர்கள்.. நீதிபதி அதிருப்தி! ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னை: மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், வெறுங்கைகளில் குப்பைகளை பிரிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் பெய்த கனமழை, சென்னையை புரட்டி போட்டுவிட்டது. சென்னையில் சேர்ந்திருக்கும் கழிவுகளை அகற்ற அதிக அளவில் தூய்மை பணியாளர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் தூய்மை பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தமாக சுமார் 2 ஆயிரத்து 300 தூய்மைப் பணியாளர்கள் 5 நாட்களில் 35 ஆயிரம் டன் குப்பைகளை அகற்றியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சென்னையில் வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைகள் மக்கும் குப்பை/மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் மேலெழுந்திருக்கின்றன.

அதேபோல மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்திருக்கிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் தடை உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், வெறுங்கைகளில் குப்பைகளை பிரிப்பது குறித்து நீதிபதி ஆஷா அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், குப்பைகளை சேகரிக்கும் இடங்களிலேயே அவற்றை பிரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வழக்கு விசாரணையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகியிருந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாஸ்க், கிளவுஸ், ஷூக்கள் வழங்கப்படுகிறது. 50 முதல் 60 சதவீதம் மக்கள் வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதாகவும், மற்றவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என விளக்கமளித்தார்.
மேலும், "குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது அசவுகரியமாக இருப்பதாக பணியாளர்கள் கூறுகிறார்கள். உபகரணங்களை பயன்படுத்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளை நீதிமன்றம் சிறையில் தள்ளும் என, பணியாளர்களிடம் எச்சரித்திருக்கிறோம்" என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications