பி.ஆர்.பாண்டியனின் 13 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ஓஎன்ஜிசி சொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனின் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக, ஆழ்துளை கிணறுகள் அமைக்க முயற்சித்தது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் கடந்த 2015 ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது.
அந்த போராட்டத்தின் போது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன், செல்வராஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 22 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பி.ஆர்.பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது தண்டனையை நிறுத்தி வைக்க மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழஙி்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதாக கூறினார். 22 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இதையடுத்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications