'கோயில் ஆக்கிரமிப்பு.. தவறு செய்யும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை..' ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாகக் கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.செந்தில்குமார் எம்.டி.ஹெச். சாலையில் 3 ஆயிரத்து 227 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இவரது தந்தை காலத்தில் அந்த நிலத்தையும், கட்டிடத்தின் உரிமையும் அவரது சகோதரிக்குப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அவரிடம் இருந்து செந்தில்குமார், தனது பெயருக்கு மாற்றியுள்ளார். கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகக்கூறி, இந்து சமய அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதை எதிர்த்து கே.செந்தில்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, ஆக்கிரமிப்புக்குள்ளான சொத்துக்களைக் கையகப்படுத்தி, ஆக்கிரமிப்பாளரை உடனடியாக துறை அதிகாரிகள் வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கோயிலுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு தொடர்பாகத் தகுந்த விசாரணை நடத்தி, வருவாய் இழப்பை மீட்பதற்காகச் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாகக் கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன், கோயில்களின் கட்டுப்பாட்டாளராக அரசு இருப்பதால், அந்த குற்றங்கள் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றன என வேதனை தெரிவித்துள்ளார்.
சில பேராசைக்காரர்கள், சில தொழில்முறை குற்றவாளிகள், நில அபகரிப்புக்காரர்களால் கோயில் சொத்துகள் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுவதாக எச்சரித்துள்ள நீதிபதி, அரசு அதிகாரிகள் தரப்பில் ஏற்படும் தவறுகள், அலட்சியம், கடமைகளை மீறுவது ஆகியவை தீவிரமாகப் பார்க்கப்பட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications