மதுரையில் மானத்தை வாங்கிய அதிமுக.. சொதப்பலான பிளான்கள்.. எடப்பாடி பழனிசாமி எடுத்த அஸ்திரம்.. பலே பலே
சென்னை: அதிமுகவின் கள ஆய்வுக்குழுவினர், தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் விவகாரம், அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, கட்சிக்குள் நடந்து வரும் கோஷ்டி மோதல், ரகளையை கண்டு அதிர்ந்துபோயுள்ளாராம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. என்ன நடந்தது?
வரப்போகும் 2026 -ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனியர் லீடர்கள்: இந்தநிலையில், அதிமுக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்தலை எதிர்கொள்ளும் முகமாக சமீபத்தில் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்திருந்தார்.. அதன் முடிவில், அதிமுகவின் சீனியர் லீடர்கள் கே.சி.முனுசாமி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஷ்வநாதன், செம்மலை உட்பட 10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை அமைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த குழுவினர், இருவர் இருவராக பிரிந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அதிமுகவில் களப்பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில், நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கள ஆய்வு பணிகள் நடத்தப்பட்டுள்ளன.. அப்போது மாவட்ட அதிமுகவில் உள்ள கோஷ்டிகள், அடிதடி ரகளையில் குதித்துவிட்டார்களாம்.. இந்த ரகளைகள் தான் பெரிய அளவில் வெடித்துள்ளது.
கள ஆய்வுப்பணிகள்: இதனால் கள ஆய்வுக் குழுவினர், தங்களுடைய கள ஆய்வுப்பணிகளை முழுமையாக முடிக்க முடியாமல் பாதியிலேயே கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டதாம்.. அத்துடன் கடுமையான அதிருப்திக்கும் ஆளாகியிருக்கிறது.. எனவே, இந்த குழுவினர், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளனர்.
அப்போது, "மாவட்டத்தில் கள ஆய்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்பவர்கள் கோஷ்டி அரசியலுக்கு இடம் கொடுக்காத அளவுக்கு கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால், கூட்டத்தை ஏற்பாடு செய்கிற கட்சியின் சீனியர்களே, இப்படிப்பட்ட மோதல்கள் வருவதற்கு ஒரு காரணமாகவும் இருக்கிறார்கள். கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தான் மாவட்டத்தில் இவர்கள் கட்சியை வைத்திருக்கிறார்கள்.
கோஷ்டி மோதல்: இவர்களின் கோஷ்டி மோதலால், களப்பணிகளை ஆய்வு செய்ய முடிவதில்லை. கூட்டத்தையும் முழுமையாக நடத்த முடிவதில்லை. மாவட்டத்தில் உள்ள கோஷ்டி மோதலை சரி செய்யாமல் மாவட்ட செயலாளர்கள் அலட்சியமாக இருப்பதுதான் ரகளைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.
இந்த சூழலில், கள ஆய்வு பணிகளை மேற்கொள்வது, அதன் நோக்கத்தை சீர்குலைக்கும்.. மோதல் தான் பொது வெளியில் பேசப்படும். இது நல்லதல்ல. அதனால், மா.செ.க்கள் அனைவருக்கும் கடுமையான உத்தரவைப் பிறப்பியுங்கள். இனி எந்த ஒரு கூட்டத்திலும் இப்படி ரகளைகளோ, கோஷ்டி மோதல்களோ நடக்கக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக எச்சரிக்கை செய்யுங்கள்" என்று தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்களாம்..
கவலையில் அதிமுக: இதைக்கேட்டு அதிர்ந்த எடப்பாடி பழனிசாமி, பிரச்சனைகள் இருக்கும் மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறாராம்..
அதாவது, மதுரையில் அதிமுக மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், கள ஆய்வுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்துள்ளது.. இதில் நத்தம் ஆர். விஸ்வநாதன், மற்றும் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே, பேச வாய்ப்பளிக்க மறுத்ததாக கழக நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து 2 பிரிவினர்களாக கழக நிர்வாகிகள் பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம்: ஏற்கனவே நெல்லை மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்திலும் இப்படித்தான் நிர்வாகிகள் மோதி கொண்டனர்.. இப்போது மதுரையில், அதுவும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதுநாள்வரை, அதிமுகவில் 2 அணிகளாக பிரிந்து கிடப்பவர்கள் மட்டுமே மோதிக் கொண்டிருந்த நிலையில், இப்போது ஒரே அணியில் உள்ளவர்களும் மோதிக்கொண்டு ரகளை செய்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை கட்சிக்குள் ஏற்படுத்தியிருக்கிறதாம். தேர்தல் வேலையில் ஏற்கனவே திமுக தீயாய் இறங்கிவிட்ட நிலையில், அதிமுகவில் இன்னமும் இப்படி கோஷ்டி பூசல் நிலவி கொண்டிருக்கிறதே என்று எடப்பாடி தரப்பினர் கவலையிலும் ஆழ்ந்துள்ளனராம்..!
மதுரை கூட்டத்தில், கடும் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.. இருதரப்பு ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.. இதன் உச்சக்கட்டமாக செல்லூர் ராஜூ தரப்பினர் கடுங்கோபத்துடன் மேடையிலிருந்து இளஞ்செழியன் உள்ளிட்டோரை கீழே தள்ளி, சரமாரியாக தாக்கி மாறி, மாறி அடித்துள்ளனர். இந்த தாக்குதலில் இளஞ்செழியனுக்கு முதுகிலும், தோள் பட்டையிலும் குத்தும், அடியும் சரமாரியாக விழுந்தன. ராமச்சந்திரனின் சட்டை கிழிந்துள்ளன.
செல்லூர் ராஜூ உட்காருங்கப்பா, உட்காருங்கப்பா என்று மைக்கைப்பிடித்து சத்தம் போட்டும்கூட, யாரும் சமாதானமாகவில்லையாம். மேடையிலிருந்து கீழே தள்ளியபோது, பலரும் கீழே விழுந்திருக்கிறார்கள்.. இதில் அதிமுக மகளிர் அணி முன்னாள் இணைச் செயலாளர் இந்திராணியின் பல் உடைந்துள்ளது.. இந்த அடிதடி மோதலால் கள ஆய்வுக்கூட்டம் நடந்த மண்டபப் பகுதியே போர்க்களமானதுதான், அதிமுக மேலிடத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications