அசால்ட்டாக 110 கி.மீ வேகத்தை எட்டிய வந்தே பாரத்.. பென்ஸ் கார் மாதிரி ஸ்மூத்தா போகுதே..வெளியான வீடியோ
சென்னை: சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில், மதுரை முதல் பெங்களூர் இடையே புதிதாக இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட மதுரை-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 110 கிமீ வேகத்திலும், எவ்வித அதிர்வுமின்றி பயணித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் மேலும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது.
எக்ஸ்பிரஸ் , சதாப்தி ரயில்களை விட வேகம் என்பதோடு, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் இதில் வழங்கப்படும். அதிவேக இண்டர்நெட், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி போன்ற சேவைகளோடு, 24 மணி நேரமும் உணவு குடிநீர் போன்ற வசதிகளோடு பயணிகளுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணத்தின் போது கூட மிகவும் வசதியாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் பயணிப்பாதாக கூறுகின்றனர் பயணிகள்.
ஏற்கனவே இந்தியாவின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோயில் இடையேயும், மதுரை பெங்களூரு இடையேயும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே சென்னை -நெல்லை, பெங்களூரு -சென்னை, விஜயவாடா -கோவை, பெங்களூர்- சென்னை, சென்னை- கோவை இடையான வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று தொடங்கப்பட்ட ரயில்களால் தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எழும்பூர் -தாம்பரம் இடையே 380 கட்டணம் தொடங்கி, சென்னை நாகர்கோவில் வரை 1760 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டணம் உணவுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உணவு வேண்டாம் என வாடிக்கையாளர்கள் கருதினால் 300 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை கட்டணம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல மதுரை பெங்களூர் இடையேயான ரயில் சேவையும் இன்று தொடங்கியது.
எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து காலை 5.15க்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் ஒன்றரை மணிக்கு புறப்படும் ரயில் மதுரைக்கு 9.45 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரயிலிலும் சேர் கார் கட்டணம் 1750 ரூபாயில் இருந்து 440 வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயிலிலும் உணவு கட்டணம் இணைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரயில் எவ்வளவு விரைவாக சென்றாலும் மிக ஸ்மூத்தாக இருக்கும் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
இந்த நிலையில் இன்று இயக்கப்பட்ட மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயில் மிக குறைந்த நேரத்தில் 110 கிலோமீட்டர் வேகத்தை எட்டி பயணித்தது. தற்போது அந்த காட்சிகளை அரசு வெளியிட்டுள்ளது. ரயில் நிலையத்தை தாண்டியது.. 20 நொடிகளிலேயே வேகத்தை அதிகரித்த பைல்ட்கள், கட்டளைகளை வழங்கியவாரே ரயிலை இயக்கினர். சிறிது நேரத்திலேயே ரயிலின் வேகம் 110 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியது. அப்போது ரயில் எவ்வித குலுக்கலும் இன்றி பயணித்தது. இந்த வீடியோவை "பிஐபி தமிழ்நாடு" வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications