இங்க வலிக்குது.. அங்க குடையுதுனு.. படிக்காத முண்டங்கள்..பெண் மருத்துவர்களை ஆபாசமாக பேசிய அதிகாரி!
மதுரை: மதுரையில் பெண் மருத்துவர்கள் உடன் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்திய மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரகுருபரன் மீட்டிங் என்றாலே அங்கே வலிக்குது.. இங்கே குடையுது என சொல்லக் கூடாது என ஆபாசமாக பேசிய நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் மருத்துவர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு நிலைகளில் மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள்.
இவர்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மருத்துவப் பணிகள் இணை இயக்குனர், துணை இயக்குனர், மாவட்ட சுகாதார அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். அப்படி மதுரை மாவட்டத்தில் பணியாற்றுபவர் தான் குமர குருபரன்.

இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட சுகாதார அலுவலராக பணியாற்றிய அவர் அங்கு மருத்துவர், செவிலியர்களை மிரட்டுவதும் ஆபாசமாக பேசுவதுமாக இருந்த நிலையில் அவர்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரை மாவட்ட சுகாதார அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு வாரமும் மாவட்டங்களில் மாவட்ட சுகாதார அலுவலரின் தலைமையில் கூட்டம் நடத்தப்படுவதுண்டு.
வழக்கமாக இந்த கூட்டங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடக்கும் கூட்டத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் மீட்டிங் என்ற பெயரில் மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து இரவு 7 மணி வரை கூட்டம் நடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் குமரகுருபரன். அது மட்டும் அல்லாமல் அனைவரும் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் பெண் மருத்துவர்கள் என்றும் பாராமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
5 மணி நேரம் கூட்டம் நடந்தாலும் வீடியோவை ஆன் செய்து விட்டு யாரும் எங்கும் நகர கூடாது என உத்தரவு வேறு போடுவாராம். இயற்கை உபாதை கழிக்க செல்ல வேண்டும் என்றால் கூட பள்ளி மாணவர்களைப் போல அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் என கூறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் பெண் மருத்துவர்களை அநாகரீகமாக பேசியதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
ஒரு வீடியோவில் பேசும் அவர்," குமரகுருபரன் மீட்டிங் என்றாலே அங்கே வலிக்குது.. இங்கே குடையுது என சொல்லுகிறார்கள்" எனக் கூறியிருக்கிறார். மற்றொரு வீடியோவில் மருத்துவ விடுப்பு எடுத்துச் சென்ற பெண் மருத்துவரை 'நீ வா போ' என ஒருமையில் பேசியிருக்கிறார். இன்னொரு வீடியோவில் சக ஊழியர்களை திட்டுவது போல 'படிக்காத முண்டங்களை வைத்து வேலை வாங்குகிறேன்" என பேசி இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் மருத்துவர்கள் குறிப்பாக பெண் மருத்துவர்கள் என்றும் பாராமல் பேசிய இவரை தமிழ்நாடு அரசு உரிய விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர் அரசு மருத்துவர்கள். அது மட்டுமல்லாமல் இதற்கு அரசு மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications