எதுக்காக அடிச்சீங்க..அடிவாங்கி உயிரிழந்த அஜித்குமார்? ஆயுதம் இல்லாதவரை தாக்கியது ஏன்? நீதிபதி கேள்வி
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித் வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய கோரி முறையீடு செய்யப்பட்ட நிலையில், ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத பட்சத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்தி உள்ளது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே அந்த கோவிலுக்குச் சென்ற மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தன்னுடைய நகைகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணுக்கு உதவிய அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் விசாரணையின் போது அஜித்குமார் திடீரென உயிரிழந்தார். அஜித் குமாரை கொடூரமாக தாக்கி போலீசார் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீஸாருடன பேச்சுவார்த்தை நடத்தி அஜித்குமாரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்ட நிலையில் பலத்த பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. மேலும், அஜித்குமாரை தாக்கியதாக புகாருக்குள்ளான ஆறு காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு ராஜராஜன், மாரிஸ் குமார், மற்றும் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியன் நீதிபதி மரியா கிழார் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தனர்.
மடப்புரம் கோவிலில் பணியில் இருந்த காவலர் அஜித் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. அதில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 24 லாக்கப் நடந்துள்ளது என நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம் 24 லாக் அப் டெத் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரம் என்ன என கேள்வி எழுப்பியதோடு, ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத பட்சத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்தி உள்ளது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர் மனுவாக பதிவு செய்யுங்கள் நாளைய விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications