ஒரு கை பாத்துருவோம்.. மதுரை வடக்கில் மல்லுக்கட்டும் விஐபிகள்! சூடு பிடித்த களம்.. தேர்தல் வேலை ஜரூர்
மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் தமிழகத்தின் மையப் பகுதியான மதுரையில் தேர்தல் போட்டி சூடு பிடித்திருக்கிறது. குறிப்பாக முக்கிய தொகுதியான மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தற்போதியிலிருந்தே தேர்தல் வேலைகளை துவக்கி இருக்கின்றனர் திமுக, அதிமுக நிர்வாகிகள். திமுக தரப்பில் தளபதி, சௌந்தர், அதிமுக தரப்பில் சரவணன், பாஜக தரப்பில் சீனிவாசன் ஆகியோர் போட்டியிட தயாராகி வருகின்றனர்.
2026 தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருந்தாலும் தற்போது வேலைகளை துவக்கி விட வேண்டும் என ஆர்வம் காட்டுகின்றனர் அரசியல் கட்சியினர். வழக்கம்போல திமுகவும், அதிமுகவும், பூத் கமிட்டி கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என கள அரசியல் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் மூத்த முன்னோடிகள் தங்கள் தொகுதிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் இருக்கும் 10 தொகுதிகளிலும் தேர்தல் வேலைகள் சூடு பிடித்திருக்கிறது. ஏறக்குறைய தேர்தலுக்கு 10 மாதங்கள் இருக்கும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

2026 தேர்தல்
மதுரையை பொறுத்தவரை 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும் அதிருப்தி நிலவிய போதும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் ஐந்து ஐந்து தொகுதிகளை பகிர்ந்து கொண்டது. அந்த அளவுக்கு மதுரை திமுகவுக்கும், அதிமுகவுக்கும் சம அளவில் ஆதரவாக இருக்கிறது. மதுரை மாவட்டத்தை பொருத்தவரை தமிழக அளவில் பிரபலமான பல முக்கிய முகங்கள் இருக்கின்றனர்.
மதுரை அரசியல்
திமுக தரப்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி, எம்எல்ஏ தளபதி, அதிமுகவில் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, டாக்டர் சரவணன் என பலமான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கூடுதலாக நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களும் களமிறங்குவார்கள். இந்த நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தற்போதே வேட்பாளர்கள் களம்இறங்க துவங்கி இருக்கின்றனர்.
மதுரை வடக்கு
மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை சிறுபான்மையினர், யாதவர், பிள்ளைமார், முதலியார், முக்குலத்தோர், சவுராஷ்டிரா என அனைத்து சமுதாயத்தினரும் பரவலாக வசிக்கும் பகுதியாகும். மதுரையின் முக்கியப் பகுதிகளை இந்த தொகுதி உள்ளடக்கியிருப்பதால் இங்கு போட்டியிட திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் அந்தந்த கட்சிகளை சேர்ந்த வி.ஐ.பி.க்கள் களமிறங்க விரும்புகிறார்கள்.
திமுக வேட்பாளர்
திமுகவைவை பொறுத்தவரை தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.வும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான தளபதி மீண்டும் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இளைஞரணியை சேர்ந்த ஒருவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படும் என்ற பேச்சும் தொகுதிக்குள் பரவுவதால், எம்.எல்.ஏ. சீட் ரேஸில் மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரான சவுந்தரும் இடம் பிடித்திருக்கிறார். இதேபோல் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் சிலரும் இந்த தொகுதியை குறிவைத்துள்ளனர்.
காங்கிரஸ்
திமுகவில் இப்படி பலரும் சீட்டை எதிர்நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் கட்சிக்கும் மதுரை வடக்குத் தொகுதி மீது ஒரு கண் இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் களமிறங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
அதிமுக வேட்பாளர்
அதிமுக -பாஜக கூட்டணியை பொறுத்தவரை மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட டாக்டர் சரவணன், பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணியில் தொகுதியை பாஜகவுக்கு கொடுத்துவிடக் கூடாது என்பதில் டாக்டர் சரவணன் தரப்பு முனைப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. டாக்டர் சரவணனமும் தற்போதே தேர்தல் பணிகளை துவக்கி விட்டார். ஆனால் பாஜகவோ இந்த முறை மதுரை வடக்கை அதிமுக கூட்டணியில் கேட்டுப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக வெற்றி கழகம்
தமிழக வெற்றிக்கழகத்தை பொறுத்தவரை அக்கட்சியின் மாவட்டச் செயலாளரான விஜய் அன்பன் கல்லாணை என்பவர் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்ட செந்தில்குமார் மீண்டும் களம்மிறங்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் முதன்முறையாக மதுரை வடக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர்களை களம் இறக்கும் திட்டத்திலும் சீமான் இருக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications