என்னடா இது.. மதுரைக்கு வந்த சோதனை.. அசுத்தமான 10 நகரங்கள் பட்டியலில் மதுரை முதலிடம்!
சென்னை: இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் வருடாந்திர ஸ்வச் சர்வேக்ஷன் கணக்கெடுப்பில், லூதியானா 2வது இடத்திலும் சென்னை 3வது இடத்திலும் டெல்லி 10வது இடத்திலும் உள்ளன.
அகமதாபாத், போபால், லக்னோ, ராய்ப்பூர், ஜபல்பூர் உள்ளிட்ட நகரங்கள் நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வச் சர்வேக்ஷன் (Swachh Survekshan) என்பது நகர மற்றும் கிராமப்புற தூய்மையை அளவிடும் இந்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கை மேற்கொள்ளும் அமைப்பு. இந்த அமைப்பு ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் இருக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
ஸ்வச் சர்வேக்ஷன், நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் ஜல் சக்தி அமைச்சத்தின் கீழ் நடத்தப்படுகிறது. இந்த ஆய்வானது "ஸ்வச் சர்வேக்ஷன்" மற்றும் "ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன்" என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் நகரங்கள் மற்றும் கிராமங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்கிறது.
நகர்ப்புற சுகாதாரம், பொது இடங்களின் சுகாதாரம், சுற்றுலாத் தலங்களின் சுகாதாரம் மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற பல பிரிவுகளில் நகரங்களின் செயல்திறன் மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்து உள்ளது.
இந்த பட்டியலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த லூதியானா இரண்டாம் இடத்தையும் சென்னை மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ராஞ்சி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூர் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தில் மும்பை, 9வது இடத்தில் ஸ்ரீநகர் மற்றும் 10வது இடத்தில் டெல்லி உள்ளது.
அசுத்தமான நகரங்களில் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மற்றும் சென்னை ஆகியவை முதல் 10 இடங்களில் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னையும், மதுரையும் அசுத்த நகரங்களாக பட்டியலிடப்பட்டிருப்பது தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. 2024 - 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில், மதுரை கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில் கடைசி இடமான 40வது இடத்தைப் பெற்றது மதுரை.












Click it and Unblock the Notifications