மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சர்ப்ரைஸ்.. அப்பீல் செய்த பெண்களின் வங்கி கணக்கில் ஏறிய பணம்! எப்படி
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்து காத்திருந்த பெண்களுக்கு, மே மாதம் முதல் இன்ப அதிர்ச்சியாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தில் தற்போது இணைக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பயனாளிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.. தமிழகத்தில் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தற்போதைய புதிய அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், மே மாதத்திற்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் கடந்த வாரம் வரவு வைக்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிப்படி இந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாகத் தவெக ஆட்சி அறிவித்திருந்தது. இருப்பினும், திட்டத்தை மறுசீரமைக்க கால அவகாசம் தேவைப்படுவதால் உடனடியாக அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சூழலில், தற்போது வழக்கமான ரூ.1,000 மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
புதிய முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், திட்டத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதற்குப் போதிய கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார். அரசின் இந்த முடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், வழக்கம்போல மே மாதத்திற்கான உதவித் தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டது பயனாளிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ரூ.1,000 பெற்று வந்த பெண்கள், இனி வரும் மாதங்களில் அரசு வாக்குறுதி அளித்தபடி ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். திட்டத்தின் மறுசீரமைப்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே, உயர்த்தி அறிவிக்கப்பட்ட தொகையைச் செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், நீண்ட நாட்களாகக் காத்திருந்த பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
உரிமைத் தொகை 1000 ரூபாய்
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து சுமார் 17 லட்சம் பெண்கள் புதிய பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்திருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கருதிய பல்லாயிரக்கணக்கான பெண்கள், மீண்டும் இத்திட்டத்தில் சேரத் தீவிரமாக மேல்முறையீடு செய்திருந்தனர்.
ஆனால், தேர்தல் காலக் கட்டுப்பாடுகளால் இம்மனுக்கள் மீது எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது அரசு எடுத்துள்ள திடீர் நடவடிக்கை பலரது வாழ்வாதாரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மே மாதம் 15-ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழக்கம்போல பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டபோது, அதில் பலருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
மேல்முறையீடு செய்த பெண்கள்
முறையாக விண்ணப்பித்தும் தகுதிகள் இருந்தும் பல்வேறு குளறுபடிகளால் நிராகரிக்கப்பட்டிருந்த, மேல்முறையீடு செய்த பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அரசு எந்தவிதாமான முன்னறிவிப்பும் இல்லாமல், இத்தகைய பயனாளிகளின் கோரிக்கைகளை ஏற்று, நேரடியாகத் தொகையை வரவு வைத்திருப்பது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தங்களின் தகுதியைச் சரியாகக் கணக்கிட்டு, அரசு மீண்டும் வாய்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாகக் காத்திருந்த இவர்களுக்கு, இந்தத் தொகை ஒரு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது.
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள்
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதற்கான பலன் நேரடியாகக் கிடைத்திருப்பது, திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனாளிகளோடு, தற்போது புதிதாக இந்தத் தொகையைப் பெற்ற பெண்களும் அரசின் இத்தகைய அணுகுமுறையைச் சமூக வலைதளங்களிலும், பொது இடங்களிலும் கொண்டாடி வருகின்றனர்.
வரும் காலங்களில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மற்ற தகுதியான பெண்களுக்கும் இத்திட்டத்தின் பலன்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது மேலோங்கியுள்ளது. அதேசமயம், அரசின் இந்தச் செயல்பாடு திட்டத்தின் வெளிப்படைத்தன்மையையும், தகுதியான மக்களைச் சென்றடைவதற்கான அரசின் உறுதியையும் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இத்தகைய திடீர் மாற்றங்கள், திட்டத்தின் விரிவாக்கத்திற்கும், மேலும் பல பெண்கள் பயனடைவதற்கும் வழிவகை செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications