மகாத்மா காந்தி நினைவு தினம்..மோடி ட்வீட்.. எழும்பூரில் இணைந்து அஞ்சலி செலுத்திய ஆளுநர், முதல்வர்
நமது தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். வீரர்களின் தியாகங்கள் ஒருபோது மறக்கப்படாது.
சென்னை: மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நேரத்தில் மது தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் மு.க ஸ்டாலினும் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார். நமது தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். வீரர்களின் தியாகங்கள் ஒருபோது மறக்கப்படாது. மேலும் உழைக்க வேண்டும் என்ற உறுதியை வலுப்படுத்தும்' எனவும் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கெனவே காந்தியடிகளின் சிலை இருந்துவரும் நிலையில், சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் காந்தியின் மற்றொரு முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி, காந்திய இசைப்பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு 76வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இணைந்து சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு கூட்டாக அஞ்சலி செலுத்தினர்.
கடந்த மாதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு இடையேயான மோதல் போக்கு நீடித்தது. குடியரசு தின நாளில் மோதல் முடிந்து இணக்கம் அதிகரித்தது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலின் இடையே இணக்கம் அதிகரித்துள்ளது. இருவரும் இணைந்து கூட்டாக காந்தியும் உலக அமைதியும் என்ற புகைப்படக்கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.