நான் வேற மாதிரி பேசிருவேன்! உங்களுக்கு எப்படி பேசணும்? தலைமை ஆசிரியையிடம் கேட்ட மகாவிஷ்ணு
சென்னை: சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கும் முன்பாக தலைமை ஆசிரியரிடம், "என் கிட்ட பேச சொன்னா நான் வேற மாதிரி பேசிருவேன்.. உங்களுக்கு எப்படி பேசனும்" என மகாவிஷ்ணு பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மகாவிஷ்ணு தலைமை ஆசிரியை அறையில் பேசியதாவது: காணும் பொருள் எல்லாம் அணுக்களின் சேர்க்கை என ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். காண காண முற்பட்டவன் கடவுளே என தன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். ஆனால் நாம் மாற்றி மாற்றி சொல்கிறோம். என்னை பேச சொன்னால் நான் வேற மாதிரி பேசிருவேன், உங்களுக்கு குழந்தைகளுக்கு எப்படி பேசணும் என கேட்கிறார். அப்போது அருகில் இருந்த இரு பெண்கள் அவர்கள் ஆசிரியைகளா அல்லது பள்ளி நிர்வாகிகளா என தெரியவில்லை. இருவரும் சிரிக்கிறார்கள்.
சத்தியத்தை பேசலாமா என மகாவிஷ்ணு கேட்க, அதற்கு அந்த தலைமை ஆசிரியரோ எங்கள் பிள்ளைகளின் வயதை பாருங்கள். அவர்கள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பேச வேண்டும் என சொல்கிறார். அதற்கு மகாவிஷ்ணுவோ, "சரி நீங்கள் சொல்லுங்கள், அவர்கள் எதிர்காலத்தில் எப்படி போக வேண்டும் என்ற புரிதலில் இருக்கிறீர்கள்" என கேட்கிறார்.
இப்படியாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பேசுமாறு தலைமை ஆசிரியை கூறியுள்ள நிலையில் மகாவிஷ்ணுவோ, அவர்கள் நெஞ்சில் நஞ்சை கலப்பது போன்ற ஒரு விஷயத்தை பேசியுள்ளார். அதாவது முற்பிறவியில் யார் பாவங்களை செய்திருந்தாலும் அவர்கள் இந்த பிறவியில் கண்கள் தெரியாமல், கை, கால்கள் குறைபாடுடனும் ஏழைகளாகவும் பிறப்பார்கள் என பேசினார்.
அப்போது அங்கு ஆசிரியராக உள்ள பார்வை குறைபாடு கொண்ட சங்கர், நீங்கள் முற்பிறவி, கர்மா என ஏதோ ஒரு மதம் சார்ந்த கருத்துகளை பேசுவதை என்னால் ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்தார். அப்போது மகாவிஷ்ணு, "நான் எதை பேச வேண்டும் என நீங்கள் சொல்லக் கூடாது. உங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் அறிவாளரா?" என மீண்டும் மீண்டும் சங்கரை அவமதிக்கும் வகையிலேயே மகாவிஷ்ணு கேட்டார்.

இந்த நிகழ்வு நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் நிலையில் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியை தமிழரசி திருவள்ளூர் பள்ளிக்கு மாற்றப்பட்டார். மேலும் இதுகுறித்து மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
இதனிடையே மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் குத்தம்பாளையத்தில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மகாவிஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications