யார் இந்த மகேஷ்குமார்? கடும் போட்டிக்கிடையே.. சென்னை துணை மேயராக தேர்வானது எப்படி.. பின்னணி என்ன?
சென்னை: சென்னை மாநகராட்சியின் துணை மேயராக மகேஷ்குமார் பொறுப்பேற்றுள்ளார். துணை மேயர் பதவிக்கு மிகுந்த போட்டி நிலவிய நிலையில் மகேஷ்குமார் தேர்வாகி இருக்கிறார்.
சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளில், திமுக கூட்டணி 178 வார்டுகளில் வெற்றிபெற்றிருக்கிறது. அதிமுக 15 இடங்களையும், அமமுக மற்றும் பாஜக தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின. ஐந்து வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
சென்னையில் மேயர், துணை மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்கு, திமுக தனிப் பெரும்பான்மையுடன் இருப்பதால் திமுகவினர் தான் அந்த பதவிகளில் அமர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்னை மேயர்
சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு சென்னை மாநகராட்சியில் 74-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் பிரியா தேர்வு செய்யப்பட்டார். இவர் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி. அதையடுத்து இன்று சென்னையின் மேயராக பிரியா பதவியேற்றுள்ளார். சென்னை மாநகராட்சியின் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் மேயர் இவர். அதேநேரம் சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயரும் ஆவார்.

துணை மேயர்
சென்னை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், துணை மேயர் பதவியை பிடித்துவிட வேண்டும் என திமுக-வில் மிகப்பெரிய அதிகார போட்டி நிலவியது. மேயராக தேர்வான பிரியா, அமைச்சர் சேகர் பாபுவின் ஆதரவாளர். அதனால் சென்னையில் தன் பலத்தை காட்ட வேண்டும் என மற்ற அமைச்சர்களும் களத்தில் இறங்கினர்.

போட்டி
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு. இவர் உதயநிதியின் தீவிர ஆதரவாளர். இவரும் துணை மேயர் ரேஸில் இருந்தார். அடுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர் இவர் தான். ஏற்கெனவே விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட போது, மாநகராட்சி தேர்தலை கை காட்டியது தலைமை. அதனால் தனசேகரன் துணை மேயருக்கான ஆர்வத்தில் இருந்தார். அடுத்து 49-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள இளைய அருணா, இதற்கடுத்து 169-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள சைதை மகேஷ் குமார். இவர் அமைச்சர் மா.சுப்ரமணியத்தின் ஆதரவாளர்.

சிற்றரசு
கவுன்சிலர் பதவியேற்பு வரை உதயநிதியின் ஆதரவாளர் சிற்றரசு தான் அடுத்த மேயர் என்று சொல்லப்பட்டது. இதனால் கட்சிக்குள் புகைச்சல் ஆரம்பமானது. இரண்டு துணை மேயர்களை கொண்டு வரலாமா என்றும் யோசித்தார்கள். ஆனால், அதுவும் சரிபடவில்லை. இந்நிலையில் தான் சென்னை முன்னாள் மேயர், அமைச்சர்
மா.சுப்ரமணியத்தின் ஆதரவாளர் மகேஷ் குமார் துணை மேயர் பதவிக்கு தேர்வானார்.

மகேஷ்குமார்
சைதை மகேஷ் குமார் கொஞ்சம் எளிமையானவர். அதேபோல் அமைதியான குணம் கொண்டவர் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. அதோடு நீண்ட காலமாக இவர் திமுக சார்பாக கவுன்சிலராக இருக்கிறார். இவர் மீது எந்த விதமான கிரிமினல் கேசும் இல்லை என்பது இவருக்கு பிளஸ்சாக அமைந்தது. பட்டதாரி, தொழிலதிபர் என வேறு சில விஷயங்களும் இவருக்கு ஆதரவாக இருந்தது. சட்டமன்ற தேர்தலில் மா.சுப்ரமணியத்துக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் மகேஷ். தற்போது மகேஷ் பொருளாதார ரீதியாக சற்று பின்னடைவுகளை சந்தித்திருந்தாலும், அதையெல்லாம் தாண்டி துணை மேயராக பதவியை பிடித்துள்ளார். மா.சு மட்டுமல்லாது, அமைச்சர் பொன்முடிக்கும் இவர் வேண்டப்பட்டவராகும். இதுவும் துணை மேயர் தேர்வில் முக்கிய பங்காற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications