திமுக மகளிரணியை முந்திக்கொண்ட மகிளா காங்கிரஸ்! மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
சென்னை: மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை கண்டித்தும், மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் மகிளா காங்கிரஸ் சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் ஜூலை 23ஆம் தேதி கனிமொழி தலைமையில் சென்னையிலும், ஜூலை 24ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அக்கட்சி சற்று முன்னர் தான் அறிவிப்பு வெளியிட்டது.

திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகிய சில நிமிடங்களில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பை தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது; ''மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததைக் கண்டித்தும், மணிப்பூர் பா.ஜ.க. அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், நாளை (22.07.2023) சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலை தர்கா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸை காட்டிலும் இந்த விவகாரத்தில் திமுக கடுமையான முறையில் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டனங்களை பதிவு செய்தும் வருகிறது. இதயம் உள்ள எவராக இருந்தாலும் மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை தாங்கிக்கொள்ள முடியாது என அமைச்சர் கீதாஜீவன் ஒரு அறிக்கை விட்டதோடு, குஷ்புவையும், வானதி சீனிவாசனையும் வறுத்தெடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக கருதப்படும் அதிமுகவில், அக்கட்சியின் மகளிரணி நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications