உயிரை பணயம் வைத்து 150 அடி பள்ளத்தில் இறங்கி சிகிச்சை அளித்த பெண் மருத்துவர்! யார் இந்த மேஜர் கவிதா?
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணி 150 அடி பள்ளத்தில் விழுந்த நிலையில், துணிச்சலுடன் கயிறு கட்டி இறங்கி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய ராணுவ மருத்துவர் மேஜர் கவிதா வாசுபள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஊசிமலை காட்சிமுனை சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு சென்ற செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சிவகுருநாதன், காட்சிமுனையில் நேற்று முன்தினம் (மார்ச் 19) செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாராவிதமாக 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதைத் தொடர்ந்து சிவகுருநாதன், தனது கார் ஓட்டுநருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். கார் ஓட்டுநர் உடனடியாக காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரமாக சிவகுருநாதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து வனத்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரவு நேரம் என்பதாலும் யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், மலைப் பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த சிவகுருநாதனை கண்டுபிடித்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் போர்வை வழங்கி அங்கேயே அவரைப் பாதுகாத்தனர்.
நீலகிரி வெலிங்டன் ராணுவ அதிகாரிகளிடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த ராணுவ வீரர்கள், காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள் கூட்டாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதன்விளைவாக, சுமார் 13 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு மறுநாள் அதிகாலை 3 மணியளவில் சிவகுருநாதனை பத்திரமாக மீட்டனர்.
குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் செண்டரைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சந்தன் மேத்தா தலைமையிலான குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றி வரும் மேஜர் கவிதா வாசுபள்ளி, யானைகள்,புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் அந்தப் பகுதியில் தைரியமாக 150 அடி பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கி காயமடைந்த சிவகுருநாதனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
மேஜர் கவிதாவின் வழிகாட்டுதலின்படி, சிவகுருநாதன் ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்டு பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டார். மார்ச் 20 அதிகாலை 3 மணியளவில் அவர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மேஜர் கவிதா வாசுபள்ளி கூறுகையில், "சுற்றுலாப் பயணி ஒருவர் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததாக எங்களுக்கு மார்ச் 20 மாலையில் அழைப்பு வந்தது. இரவு சுமார் 9.15 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றோம். கரடுமுரடான நிலப்பரப்பு, உயரமான பகுதி காரணமாக பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. அவரை மீட்பதற்காக, ராணுவக் குழுவினர் இரண்டு மலைகளுக்கு இடையே 70 மீட்டர் நீளமுள்ள டைரோலியன் டிராவர்ஸ் லைன் அமைத்தனர்.
பள்ளத்தாக்கில் இறங்கிச் சென்று அவரது நிலையைச் சீராக்க முதலுதவி சிகிச்சை அளித்தேன். இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவுகளால் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பின்னர் எனது அறிவுறுத்தல்களின்படி, மீட்புக் குழுவினர் அவரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி டைரோலியன் டிராவர்ஸ் லைன் வழியாக மேலே பத்திரமாகக் கொண்டு வந்தனர்." எனத் தெரிவித்துள்ளார்.
உயிரை பணயம் வைத்து இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய மேஜர் கவிதா வாசுபள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த மேஜர் கவிதா வாசுபள்ளி, 2025 ஆம் ஆண்டில் பிரம்மப்புத்திரா ஆற்றில் 1,040 கி.மீ ராஃப்டிங் பயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications