எகிறிடுச்சு..ங்க.. தனியார் பால் விலை உயர்வு.. லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு.. தயிர் விலையும் கூடியது.!
தனியார் பால் விலை உயர்வானது தமிழ்நாட்டில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது
சென்னை: தமிழகத்தில் தனியார் பாலின் விலையானது, லிட்டருக்கு ரூ 2 வரை உயர்ந்துள்ளது... இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கும் வந்துவிட்டது.. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.
அரசின் ஆவின் நிறுவனத்தின் பால், தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது... இதேபோல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன..
ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால், ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.. கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்ததால், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டனர்.
“அஜித் மேல கேஸ் போடுங்க..” உயிர் பறித்த ரசிகரின் 'துணிவு’! விஜய்போல் திருந்துங்க -பால் முகவர் சங்கம்
தினகரன் நறுக்
சமீபத்தில், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், ஆவினின் ஆரஞ்ச் பால் சில்லறை விற்பனை விலை உயர்த்தப்பட்டது.. "கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் அரை லிட்டர் ரூ.24-லிருந்து 30 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் பால் பாக்கெட் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும். அதேநேரம் அட்டைதாரர்களுக்கு விலை உயர்வு இன்றி லிட்டர் ரூ.48-க்கு விற்பனை செய்யப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தது. ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன.
பச்சை கலர்
இதில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பால்விலை உயர்வுக்கு எதிர்ப்பு சொன்னதுடன், முக்கிய தகவல் ஒன்றையும் அப்போது வெளிப்படுத்தியிருந்தார்.. "ஆவின் ஆரஞ்சு பால் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள். மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது" என்று கூறியிருந்தது, மிகப்பெரிய அதிர்வலையை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
மூலப்பொருட்கள்
இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் அடுத்த அதிர்ச்சியை தந்தன.. வருட தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டன.. இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வானது, இன்று முதல் அமலுக்கும் வந்துள்ளது. இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது... பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு கலர்
அதன்படி தனியார் பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது... தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.62-ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்கிறது. ஆவினில் இந்த பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்கப்படுகிறது. நிறை கொழுப்பு பால் ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்கிறது. ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல தயிர் லிட்டர் ரூ.72-ல் இருந்து ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றமானது, பொதுமக்களிடம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.