பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0 திட்டத்தின் ரூ.300 மானியம் வசதி.. இலவச எல்பிஜி கேஸ் யார் யாருக்கு கிடைக்கும்
சென்னை: கேஸ் சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களால் அதனை எளிதாக வாங்க முடிவதில்லை. அதனால்தான் இந்த நிலையை மாற்றி, ஏழை எளிய பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவவும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதுதான் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன? யார் யாருக்கு சிலிண்டர் கிடைக்கும் என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கடந்த 2016ம் ஆண்டே தொடங்கப்பட்டதுதான் இந்த இந்தத் திட்டம்.. இதற்கு பிறகு கிராமப்புறப் பெண்களிடையே ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றதால், இதன் அடுத்த கட்டமாக, "பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0" என்ற புதிய வடிவம் நடைமுறைக்கு வந்து, கோடிக்கணக்கான பெண்களுக்குப் புதிய விடியலை ஏற்படுத்தித் தந்துள்ளது.

பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0
ஏழைப் பெண்களுக்கு இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதன் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக புதிய எல்பிஜி கேஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. வெறும் இணைப்பு மட்டுமின்றி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணையும் பெண்களுக்கு முதல் சிலிண்டர் மற்றும் அதற்கான ரெகுலேட்டர் ஆகியவை முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றன.
இது தவிர, சமையல் எரிவாயு அடுப்பு வாங்குவதற்கும், முதல் முறை சிலிண்டரை நிரப்புவதற்கும் தேவையான நிதியுதவியையும் அரசே வழங்குகிறது.
அதுமட்டுமல்ல, பெண்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு சிலிண்டருக்கும் மத்திய அரசு 300 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களின் வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். முன்னதாக 9 சிலிண்டர்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 4 சிலிண்டர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே, இந்த எரிவாயு இணைப்புகள் அனைத்தும் குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயரிலேயே வழங்கப்படுகின்றன என்பதுதான். இது பெண்களுக்கு ஒருவித சமூகப் பாதுகாப்பையும், பெருமையையும் தேடித்தருகிறது.
யாருக்கெல்லாம் இந்த இலவச கேஸ் இணைப்பு கிடைக்கும்
இந்த திட்டத்தில் பயன் பெற சில முக்கிய தகுதிகள் அவசியமாகின்றன. விண்ணப்பிக்கும் பெண் கண்டிப்பாக 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, விண்ணப்பதாரரின் குடும்பத்தில் ஏற்கனவே வேறு எந்த ஒரு எல்பிஜி எரிவாயு இணைப்பும் இருக்கக்கூடாது. அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட ஏழை அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நலிந்த பிரிவைச் சேர்ந்த குடும்பமாக அது இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் குறிப்பாக எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்த குடும்பங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்கள் மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா எனப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும் காடுகளில் வாழும் பழங்குடியினக் குடும்பங்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தீவுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வேலை தேடிப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிப்பது எப்படி? ஆவணங்கள் என்னென்ன வேண்டும்
உஜ்வாலா யோஜனா 3.0 திட்டத்தின் கீழ் பயன்பெற நினைப்பவர்கள், தங்களின் அடையாளச் சான்றாக குடும்ப அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் முகவரிச் சான்று, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், விண்ணப்பிக்கும் பெண்ணின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மொபைல் எண் ஆகியவை தேவைப்படும். மானியத் தொகை நேரடியாக வந்து சேர வேண்டும் என்பதால், விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு விவரங்களையும் சரியாகக் கொடுக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறையும் மிகவும் எளிமையானதுதான். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் எல்பிஜி எரிவாயு விநியோக மையத்திற்கு, அதாவது கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாகச் சென்று இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இல்லாவிட்டால் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிக்கலாம்.
நீங்கள் இப்படி கொடுக்கும் விவரங்கள் அனைத்தும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, தகுதி உறுதி செய்யப்பட்டவுடன் உங்களுக்கான இலவச எல்பிஜி கேஸ் இணைப்பு உடனடியாக வழங்கி வைக்கப்படும்.
மொத்தத்தில் இது வெறும் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் மட்டுமல்ல கிராமப்புறப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவர்களின் நேரத்தை சேமிக்கும் ஒரு உன்னதத் திட்டமாகும்....!!!












Click it and Unblock the Notifications