பவர் பத்திரம்..பத்திரப்பதிவு கட்டணங்கள் வாபஸ் பெறப்படுகிறதா?.. பதிவுத்துறை வெளியிட்ட பெரிய அறிவிப்பு
சென்னை: பத்திரப்பதிவு துறையில், திடீரென கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், நாலாபக்கமும் அதிருப்திகள் வெடித்தன.. இதையடுத்து, முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பல காலமாகப் பதிவுத்துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை, கட்டுமான ஒப்பந்தம் போன்ற பத்திரங்களின் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது...

செட்டில்மென்ட் பத்திரம்: காரணம், இந்த கட்டண உயர்வால், புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஒருவித தயக்கம் ஏற்படும் என்றும், அதிலும், செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, வெகுஜன மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், செட்டில்மென்ட் பத்திரத்துக்கான கட்டண உயர்வை பழைய நிலைக்கே அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், கட்டுமான ஒப்பந்த பதிவுக்கு, ஏற்கனவே 1 சதவீதம் கட்டணம் இருந்த நிலையில், இப்போது 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது... இதே போன்று, பொது அதிகார பதிவுக்கு 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவைகளுடன் பிற கட்டணங்களையும் சேர்த்தால், சொத்தின் மதிப்பில், 4 சதவீதத்தை கூடுதலாக செலவிட வேண்டி வருகிறது..
கட்டண உயர்வு: தவிரவும், நிலத்துக்கு மட்டுமே வழிகாட்டி மதிப்பு இருக்கும் நிலையில், கட்டடத்துக்கான மதிப்பை எப்படி கணக்கிடுவது என்பதில் குழப்பமும் ஏற்பட்டுள்ளதால், இந்த கட்டண உயர்வை, திரும்ப பெற அரசை வலியுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வெடித்து கிளம்பின.. இதற்குத்தான் பத்திரப்பதிவு துறை முக்கிய உத்தரவு ஒன்றினை இப்போது பிறப்பித்துள்ளது.
பதிவுத்துறை அதிகாரிகளுக்கு, அந்த துறையின் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், "குடும்ப உறுப்பினர் அல்லாத நபர்களுக்கு, பொது அதிகாரம் வழங்கும்போது, 10,000 ரூபாய் என இருந்த கட்டணம், சொத்தின் சந்தை மதிப்பில், 1 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதில் சொத்தின் சந்தை மதிப்பில், 1 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடும் தொகை, ஏற்கனவே அமலில் இருந்த கட்டணமான, 10,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், 1 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்..
பதிவு கட்டணம்: குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு, கைமாற்று தொகை பெற்று, விற்பனை அனுமதியுடன் வழங்கப்படும் பொது அதிகார ஆவணத்துக்கு, சொத்தின் கைமாறும் மதிப்பில், 1 சதவீத பதிவு கட்டணம் கட்டாயம். இதில் விற்பனை அனுமதி இல்லாத பொது அதிகார ஆவணங்களை பிரித்து பார்த்து, கைமாறும் மதிப்பு அடிப்படையில்கட்டண உயர்வை கடைபிடிக்க வேண்டும். நகல் ஆவணங்களுக்கு பதிவு கட்டணம், 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதில் சொத்து வாங்குபவர், 2 நபர்களாக இருக்கும் நிலையில், அசல் ஆவணத்துடன் ஒரு நகல் ஆவணம் பதிவு செய்வதாக இருந்தால் அதற்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலித்தால் போதும். ஒன்றுக்கு மேற்பட்ட நகல் ஆவணத்தை தாக்கல் செய்தால், அதற்கு தலா, 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு: கடந்த சில தினங்களுக்குமுன்பு, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் இன்னொரு அறிக்கையை விடுத்திருந்தார்.. திடீரென பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால், பொதுமக்கள் தரப்பில் அதிருப்திகள் வெடிக்கவும், இந்த அறிக்கையை விடுத்திருந்தார்.
அதில், பதிவுத்துறை சார்பில், பதிவு நடைமுறைகள் குறித்து, ஜூலை 27ல், சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கட்டடம், மனை விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து கூட்டமைப்புகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்கு கருத்து தெரிவிக்கலாம் என பத்திரப்பதிவு மற்றும் வணிக வரிகள் துறை அமைச்சர் மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாபஸ் ஆகுமா?: அந்தவகையில், நாளைய தினம் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்க போகிறது.. இந்த கூட்டத்தின்முடிவில், பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டதில் தளர்வு வருமா? அல்லது கட்டணங்கள் நீக்கப்பட்டு பழைய நடைமுறையே அமலுக்கு வருமா? என்று தெரியவில்லை.. அந்தவகையில், நாளை நடக்கும் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications