சென்னையில் இருந்து வெளிநாடு, உள்நாடு விமான சேவைகள் பெருமளவு குறைப்பு.. பின்னணி என்ன
சென்னை: எரிபொருள் விலை உயர்வு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு பல வழித்தடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை-திருச்சி, சென்னை-கோவை, சென்னை-மதுரை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகள் குறைக்கப்ட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
அமெரிக்கா ஈரான் இடையே ஏற்பட்ட போர்ப் பதற்றத்தின் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், இந்தியாவில் விமான எரிபொருள் விலை முன்பு இருந்த சுமார் ₹60.50-லிருந்து லிட்டருக்கு ₹142 வரை உயர்ந்தது.

இந்திய விமான நிறுவனங்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாதத் தொடக்கத்தில் உள்நாட்டு விமானங்களுக்கான ATF விலையை மேலும் உயர்த்தாமல் புதுடெல்லியில் ஒரு கிலோ லிட்டருக்கு ₹1,04,927 என்ற அளவில் தற்காலிகமாக நிலைப்படுத்தின. விமான நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாவதைத் தடுக்க, மத்திய அமைச்சரவை ஜூன் முதல் வாரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தது. அதாவது விமான எரிபொருளுக்கான 'விலை நிலைப்படுத்தல் நிதி' என்ற திட்டத்தின் கீழ் ₹10,000 கோடி வட்டியில்லா முன்பண ஆதரவுத் தொகுப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
விமான எரிபொருள் விலை உயர்வு
இந்த நிதி, உலகளாவிய விலை ஏற்ற இறக்கங்களால் இந்திய விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் திடீர் அதிர்ச்சிகளைக் குறைக்கவும், உள்நாட்டு விமானச் சேவைகள் முடங்காமல் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஜூன் 16 முதல் அமலுக்கு வரும் வகையில், இந்திய அரசு விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் உற்பத்தி வரியை லிட்டருக்கு ₹9.5-லிருந்து ₹12.5 ஆக உயர்த்தியது. இதனால் விமான நிறுவனங்கள் விலையை கடுமையாக உயர்த்த தொடங்கின. அதேநேரம் சில விமான சேவைகளை ரத்து செய்யவும் தொடங்கி உள்ளன.
உள்நாட்டு விமான சேவைகள் குறைப்பு
அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு பல வழித்தடங்களில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் சென்னை-அந்தமான், சென்னை-திருச்சி, சென்னை-கோவை, சென்னை-மதுரை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை குறைத்துள்ளன. குறிப்பாக அந்தமான் வழித்தடத்தில் இருந்த தினசரி சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
சிங்கப்பூர், துபாய் விமானங்கள்
வெளிநாட்டு வழித்தடங்களான சிங்கப்பூர், துபாய், இலங்கை, கோலாலம்பூர் உள்ளிட்ட சேவைகளும் குறைக்கப்பட்டு சில வழித்தடங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமான பயணிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஏர் இந்தியா தரப்பில் உயர் அதிகாரிகள் கூறுகையில், "எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விமான சேவைகள் குறைக்கப்பட்டு உள்ளது. மாற்று விமான ஏற்பாடுகள், பயண தேதி மாற்றம், கட்டணமின்றி ரத்து மற்றும் பணம் திருப்பி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது" என்றனர். ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு விமான சேவைகள் சீராகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.














Click it and Unblock the Notifications